கேரளம் மாநிலத்தில் உள்ள 140 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல், வருகிற ஏப்ரல் 9-ந்தேதி ஒரே கட்டமாக நடத்தப்படுகிறது. தேர்தலில் போட்டியிடக்கூடிய வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், தேர்தல் ஆணையம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
பிரசாரத்தில் ஈடுபடக் கூடியவர்களும், பங்கேற்பவர்களும் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதில் குழந்தைகளை எந்த விதத்திலும் பிரசாரத்தில் ஈடுபடுத்தவோ, பங்கேற்கவோ செய்யக்கூடாது. குழந்தைகளை கையில் வைத்துக்கொண்டு பிரசாரம் செய்யக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணைய அறிவுறுத்தல்கள் குறித்து கோழிக்கோடு மாவட்ட கலெக்டரும், தேர்தல் அதிகாரியுமான சினேகில் குமார் சிங் கூறியிருப்பதாவது:-
பேரணிகள், கோஷமிடுதல், சுவரொட்டிகள் ஒட்டுதல் மற்றும் துண்டு பிரசுரங்கள் வினியோகித்தல், பிரசார கூட்டங்கள் போன்ற எந்தவொரு தேர்தல் பிரசார நடவடிக்கையிலும் குழந்தைகளை ஈடுபடுத்தக்கூடாது. பிரசாரத்தின் போது குழந்தைகளை கைகளில் ஏந்திச்செல்வதும், வாகனங்கள் மற்றும் பேரணியில் பங்கேற்பதும் அனுமதிக்கப்படாது.
தேர்தல் கவிதைகள், பாடல்கள், பேச்சுகள் அல்லது அரசியல் கட்சி அல்லது வேட்பாளர்களின் சின்னங்களை காட்சிப்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளிலும் குழந்தைகளை ஈடுபடுத்தக் கூடாது. இதுபோன்ற நடவடிக்கைகளில் குழந்தைகளை ஈடுபடுத்துவது குழந்தை தொழிலாளர் தடுப்பு சட்டம் உள்பட சட்டங்களின் கீழ் தடை செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இந்த உத்தரவுகளை பிரசாரத்தில் ஈடுபடும் அரசியல் கட்சியினர்- சுயேட்சை வேட்பாளர்கள் மற்றும் பங்கேற்பவர்கள் கடைபிடிக்கிறார்களா? என்று தேர்தல் பணியில் ஈடுபட்டிருக்கும் அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.