கணவரைவிட அதிகம் சம்பாதிக்கும், பொருளாதார ரீதியாக சுதந்திரமாக இருக்கும் மனைவி, பெண் என்பதால் மட்டும் கணவனிடம் ஜீவனாம்சம் கோரமுடியாது என கர்நாடக உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நிதி சுதந்திரத்துடன் இருக்கும் பெண்ணுக்கு குழந்தை பராமரிப்பு போன்ற எந்த பொறுப்புகளும் இல்லாதநிலையில், கணவர் ஜீவனாம்சம் வழங்கவேண்டும் என விசாரணை நீதிமன்றங்கள் உத்தரவிடக்கூடாது எனவும் கர்நாடக உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தன்னைத்தானே பராமரித்துக்கொள்ள இயலாத சூழலில் மனைவி இருக்கும்பட்சத்தில் மட்டுமே ஜீவனாம்சம் வழங்க கோரமுடியும் எனவும் தெரிவித்துள்ளது.
குடும்பத் தகராறில் மனைவி ஒருவர், தனது கணவரிடம் ஜீவனாம்சம் கோரி தாக்கல் செய்த மனுவை விசாரித்த மைசூர் நீதிமன்றம், மாதம் ரூ.20 ஆயிரம் இடைக்கால ஜீவனாம்சம் வழங்க உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவை எதிர்த்து கோனிகொப்பாவைச் சேர்ந்த 37 வயதான கணவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி சில்லக்கூர் சுமலதா விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.