விநாயகர் சிலை கரைப்பு  
இந்தியா

ஒடிசாவில் விநாயகர் சிலைகளை கரைக்கும்போது நீரில் மூழ்கி 9 பேர் உயிரிழப்பு

மீட்பு பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

ஒடிசாவில் விநாயகர் சிலைகளை கரைக்கும்போது நீரில் மூழ்கி 9 பேர் உயிரிழந்தள்ளனர்.

நாடு முழுவதும் கடந்த திங்களன்று விநாயகர் சதுர்த்தி விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதைத்தொடர்ந்து பண்டிகையின் ஒரு பகுதியாக செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் நீர் நிலைகளில் கரைக்கும் சடங்குகள் நடந்து வருகின்றன.

அந்த வகையில் வடகிழக்கு மாநிலமான ஒடிசாவில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நீர் நிலைகளில் சிலைகளை கரைக்கும் நிகழ்ச்சியின்போது பல உயிரிழந்த சோகம் அரங்கேறியுள்ளது.

உயிரிழப்புகள்

கடந்த 24 மணி நேரத்தில் ஒடிசாவில் நடைபெற்ற வெவ்வேறு சிலை கரைப்பு நிகழ்வுகளில் மொத்தம் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஒடிசாவின் கஞ்சம், சுந்தர்கார், பத்ரக், கோரபுட் மற்றும் காலஹண்டி உள்ளிட்ட மாவட்டங்களில் இந்த இறப்புகள் பதிவாகி உள்ளன.

ஒடிசா தீயணைப்பு மற்றும் அவசரகால சேவைக்கான துறையினர் வெளியிட்ட தகவலின்படி, ஜெகத்சிங்பூர் மாவட்டத்தில் எர்சாமா நகரில் உள்ள கோபால்பூர் பகுதியில் ஒடானலா என்ற இடத்தில் ஆற்றில் மூழ்கிய 4 பேர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். 3 பேர் காணாமல் போயுள்ளனர்.

இதுதவிர பல்வேறு பகுதிகளிலும் பலர் பலியாகியும், காணாமல் போயும் உள்ளனர். மொத்தம் 9 பேர் சடலங்களாகவும், 7 உயிருடனும் மீட்கப்பட்டுள்ளனர். மீட்பு பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

இந்த சம்பவங்களுக்கு ஒடிசா முதல்வர் மோகன் சரண், எதிர்க்கட்சி தலைவர் மற்றும் முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக் மற்றும் ஒடிசா காங்கிரஸ் தலைவர் பக்த சரண் தாஸ் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT