Overtime work 
இந்தியா

இந்தியாவில் 64 % பேர் ஊதியமின்றி கூடுதல் நேரம் வேலை செய்கின்றனர் - ஆய்வில் ஷாக்

16 மணிநேரத்திற்கும் மேல் ஊதியமின்றி அதிக நேரம் வேலை செய்வதாகத் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் 64 சதவீதம் பேர் ஊதியம் இன்றி பணி நேரத்தை தாண்டி வேலை செய்கின்றனர் என தெரியவந்துள்ளது.

ஏடிபி ரிசர்ச் நிறுவனம் வெளியிட்டுள்ள 'பீப்பிள் அட் வொர்க் 2026' என்ற ஆய்வறிக்கையில் இது தெரியவந்துள்ளது.

36 உலக நாடுகளைச் சேர்ந்த 39,000க்கும் மேற்பட்ட பணியாளர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில் இந்த புள்ளிவிவரங்கள் வெளியாகி உள்ளன.

இந்தியா

இந்தியாவில் ஆய்வு செய்யப்பட்ட பணியாளர்களில் 24% பேர் வாரத்திற்கு 16 மணிநேரம் அல்லது அதற்கு மேலாக எந்தவிதக் கூடுதல் ஊதியமும் இன்றி பணிபுரிகின்றனர்.

மேலும் 40% பணியாளர்கள் வாரத்திற்கு 6 முதல் 15 மணிநேரம் வரை ஊதியமின்றி வேலை செய்கின்றனர்.

இதன் மூலம் இந்தியாவில் சுமார் 64% பணியாளர்கள் வாரத்திற்கு குறைந்தபட்சம் 6 மணிநேரமாவது கூடுதல் ஊதியமின்றி உழைப்பது தெரியவந்துள்ளது.

மதிய உணவு இடைவேளையில் வேலை பார்ப்பது, பணி நேரம் முடிந்த பிறகும் தாமதமாக அலுவலகத்தில் தங்குவது போன்றவற்றை 'ஊதியமில்லா வேலை' என ஆய்வு வரையறுக்கிறது.

உலகச் சராசரி

உலக அளவில் 62% பணியாளர்கள் வாரத்திற்கு 5 மணிநேரம் வரை ஊதியமின்றிப் பணியாற்றுகின்றனர். 12% பேர் மட்டுமே 16 மணிநேரத்திற்கு மேல் வேலை செய்கின்றனர்.

ஊதியமின்றி 16 மணிநேரத்திற்கு மேல் வேலை செய்வதில் இந்தியாவுட் ( 24 %) அடுத்தபடியாக துருக்கி (23%), ஆஸ்திரியா (21%) மற்றும் அமெரிக்கா (20%) ஆகியவை உள்ளன.

செக் குடியரசில் வெறும் 4% பணியாளர்களும், சீனா, தைவான் மற்றும் ஜப்பானில் தலா 6% பணியாளர்களும் மட்டுமே வாரத்திற்கு 16 மணிநேரத்திற்கு மேல் ஊதியமின்றி வேலை செய்கின்றனர்.

சாதாரணப் பணியாளர்களை விட உயர் பதவிகளில் உள்ளவர்களே 50% பேர் கூடுதல் நேரம் வேலை செய்கின்றனர்.

அலுவலகம் வந்து பணிபுரிபவர்களை (12%) விட, வீட்டிலிருந்தே பணிபுரிபவர்களே (13%) வாரத்திற்கு 16 மணிநேரத்திற்கும் மேல் ஊதியமின்றி அதிக நேரம் வேலை செய்வதாகத் தெரிவித்துள்ளனர்.

மன அழுத்தம்

கூடுதல் நேரம் ஊதியமின்றி வேலை செய்வது வேலை உற்பத்தித் திறனை அதிகரிக்கவில்லை என்றும், மாறாக அது பணியாளர்களிடையே அதிக மன அழுத்தத்தையும் சோர்வையும் உருவாக்குகிறது என்றும் அறிக்கை எச்சரிக்கிறது.

குறிப்பாக, உயர் பதவிகளில் அதிக நேரம் ஊதியமின்றி உழைக்கும் அதிகாரிகளே மன அழுத்தம் காரணமாக வேறு வேலைகளை தேடத் தொடங்குவதாக இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.

SCROLL FOR NEXT