ஆந்திர மாநிலம், எலூரு மாவட்டம் பொலவரம் பகுதியில் உள்ள கோதாவரி ஆற்றில், ஆற்றின் ஆழம் தெரியாமல், 7 கல்லூரி மாணவர்கள் குளிக்க சென்றுள்ளனர். ஆற்றில் இறங்கியதும் ஆழம் அதிகமாக இருக்க, ஐந்து மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
இரண்டு பேருக்கு மட்டும் நீச்சல் தெரிய அவர்கள் உயிர் தப்பியுள்ளனர். இதில் மூன்று மாணவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு, பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு, பின்னர் அவர்களது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டதாக பொலவரம் காவல் துணை கண்காணிப்பாளர் எம். வெங்கடேஸ்வரா தெரிவித்துள்ளார்.
மற்ற இருவரின் உடல்களை கண்டறியும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
விசாரணையில், உயிரிழந்தவர்கள் அமராவதியில் உள்ள ஒரு கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பி.டெக் படித்து வந்த அபிராம், ஸ்ரீகர், தேஜா, சதீஷ் மற்றும் நவ்தீப் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
உகாதி விடுமுறையை ஒட்டி மாணவர்கள் பத்ராச்சலம் ஸ்ரீ சீதா ராமச்சந்திர சுவாமி கோயிலுக்கு சென்றுவிட்டு, பின்னர் கோதாவரி ஆற்றில் குளிக்கவும், புகைப்படங்கள் எடுக்கவும் முயன்றபோது பலத்த நீரோட்டத்தில் சிக்கியது தெரியவந்துள்ளது.
தொடர்ந்து இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.