மேட்டூர்:
தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்த மழை விட்டு விட்டு பெய்து வருகிறது.
இதன் எதிரொலியாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் மாறி மாறி வந்து கொண்டிருக்கிறது.
நேற்று அணைக்கு விநாடிக்கு 4,424 கன அடி வீதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்து இன்று காலை விநாடிக்கு 3,674 கன அடியாக குறைந்தது. அணையில் இருந்து பாசனத்திற்காக விநாடிக்கு 3500 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 3 ஆயிரம் கன அடிக்கு கீழ் குறையுமானால் அணையின் நீர்மட்டம் மீண்டும் மளமளவென சரிய வாய்ப்புள்ளது. இன்று காலையில் அணை நீர்மட்டம் 85.19 அடியாக உள்ளது.
இந்த நிலையில் மேட்டூர் அணையில் இருந்து கிழக்கு, மேற்கு கால்வாயில் தண்ணீர் திறந்து விட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். அவ்வாறு திறந்து விடும் பட்சத்தில் நீர்மட்டம் மேலும் குறைந்து விடும் நிலை உள்ளது.