செய்திகள்

திருமண நாளில் சோகம்: லாரி மோதி கண்டக்டர் மனைவி பலி

வெள்ளக்கோவில் அருகே குலதெய்வ கோவிலுக்கு கணவருடன் சென்ற போது லாரி மோதி கண்டக்டர் மனைவி பரிதாபமாக பலியானார்.

வெள்ளக்கோவில்:

வெள்ளக்கோவில் அருகே அய்யம்பாளையம் நால் ரோடு பகுதியை சேர்ந்தவர் அரிகரதாஸ் (வயது 41). அரசு பஸ் கண்டக்டர். இவரது மனைவி துளசிமணி (32). அவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.

நேற்று திருமண நாள் என்பதால் அரிகரதாஸ், மனைவி துளசிமணியை அழைத்து கொண்டு ஒலப்பாளையத்தில் உள்ள குலதெய்வ கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார். பின்னர் தரிசனம் செய்து விட்டு கணவன்- மனைவி இருவரும் மோட்டார் சைக்கிளில் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர்.

அப்போது பின்னால் வந்த ஒரு லாரி திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் துளசிமணி தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

இந்த விபத்து பற்றி வெள்ளக்கோவில் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

அரிகரதாசின் மகளுக்கு நேற்று பள்ளியில் தேர்வு நடந்தது. இதனால் மகளை பள்ளியில் விட்டு விட்டு கோவிலுக்கு சென்ற போது நடந்த விபத்தில் தாய் துளசிமணி பலியானார். இதனால் குழந்தை தப்பியது.