திருவனந்தபுரம்:
கேரளாவில் முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமையில் நேற்று மந்திரிசபை கூட்டம் நடந்தது. இதில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. குறிப்பாக மாநில அரசின் மருத்துவப்பணிகள் இயக்குனரகத்தின் கீழ் பணி செய்யும் டாக்டர்களின் ஓய்வூதிய வயதை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி மாநில அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் டாக்டர்களின் ஓய்வு பெறும் வயது 56-ல் இருந்து 60 ஆக உயர்த்தப்படுகிறது. மாநில மருத்துவத்துறையில் அனுபவம் வாய்ந்தவர்களின் பங்களிப்பை அதிகரிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக முதல்-மந்திரி பினராயி விஜயன் பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இதைப்போல மருத்துவக்கல்வி இயக்குனரகம் மற்றும் மருத்துவக்கல்லூரிகளில் பேராசிரியராக பணியாற்றும் டாக்டர்களின் ஓய்வு பெறும் வயதும் அதிகரிக்கிறது. இந்த பேராசிரியர்களின் ஓய்வு பெறும் வயது 60-ல் இருந்து 62 ஆக உயர்த்தப்படுவதாக கூறிய பினராயி விஜயன், இந்த விவகாரங்களில் தங்களின் பரிந்துரைகளை அமல்படுத்துமாறு இந்திய மருத்துவக்கவுன்சில் கேட்டுக்கொண்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.