செய்திகள்

மைசூரு தசரா விழா ஆரம்பம்: குமாரசாமி - சுதா மூர்த்தி தொடங்கி வைத்தனர்

சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜையுடன் மைசூரு தசரா விழா இன்று தொடங்கியது. கர்நாடக முதல்வர் குமாரசாமி மற்றும் சுதா மூர்த்தி ஆகியோர் விழாவை தொடங்கி வைத்தனர். #MysuruDasara #Karnataka #Kumaraswamy #SudhaMurthy

கர்நாடக மாநிலம் மைசூரு நகரில் ஆண்டுதோறும் விஜயதசமியை முன்னிட்டு 10 நாட்கள் அரசு சார்பில் தசரா விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அவ்வகையில் இந்த ஆண்டுக்கான தசரா விழா இன்று தொடங்கி 19-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. இது 408-வது ஆண்டு தசரா விழாவாகும். இந்த ஆண்டு மழையால் குடகு, தட்சிணகன்னடா ஆகிய மாவட்டங்கள் பாதிக்கப்பட்டதால், தசரா விழாவை எளிமையாக நடத்த அரசு முடிவு செய்தது.

அதன்படி மைசூரு அருகே சாமுண்டி மலையில் குடிக்கொண்டிருக்கும் சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜையுடன் இன்று காலை மைசூரு தசரா விழா தொடங்கியது. சிறப்பு பூஜை செய்து தசரா விழாவை கர்நாடக முதல்வர் குமாரசாமி, இன்போசிஸ் அறக்கட்டளை தலைவியும், எழுத்தாளருமான சுதாமூர்த்தி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.