புதுடெல்லி :
மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளிப்புத் துறை அமைச்சர் தவார் சந்த் கெலோட், பணியாளர் மற்றும் பயிற்சித்துறை அமைச்சகத்திற்கு எழுதியுள்ள கடிதத்தில், அரசு துறை சார்ந்த அலுவலகங்களில் உள்ள பகுதி நேர மற்றும் ஒப்பந்த பணியிடங்களுக்கு இடஒதுக்கீட்டு கொள்கை அடிப்படையில் ஆதி திராவிடர்கள், பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்கள் நியமனம் செய்ய வேண்டும்.
இவர்களுக்கான சம்பளம் அரசின் நிதியிலிருந்து போவதால் இது போன்ற பணிகளில், அடிப்படை ஒப்பந்தம் மற்றும் வெளியிலிருந்து பணியாற்றும் நபர்களை தேர்வு செய்யும் நடைமுறையில், எஸ்.சி, எஸ்.டி மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளதால் இவர்களுக்கும் முன்னுரிமை அளிக்கும் வகையில் இந்த பணி நியமனங்கள் இருக்க வேண்டும் என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், பணி நிரந்தம் அல்லாத அனைத்து மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கும் இந்த இடஒதுக்கீடுக் கொள்கை பொருந்தும் என அவர் அந்த கடிதத்தில் எழுதியுள்ளார்.
அரசு அலுவலகங்களில் உள்ள பகுதி நேரம் மற்றும் ஒப்பந்த பணிகளுக்கு அரசியலமைப்பின் படி இடஒதுகீட்டு கொள்கையை பின்பற்றாமல் பணி நியமனம் நடைபெற்று வருவதால் ஆதி திராவிடர்கள், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்களின் உரிமைகள் மறுக்கப்பட்டு வருகின்றன என எதிர்கட்சிகள் மத்திய அரசு மீது குற்றம்சாட்டி இருந்த நிலையில் இந்த புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. #Reservations #SocialJusticeMinistry