செய்திகள்

இங்கிலாந்து கடற்கரையில் கேரள பாதிரியாரின் பிரேதம் கண்டெடுப்பு

இங்கிலாந்து சர்ச்சுக்கு தொண்டு செய்வதற்காக சென்று, காணாமல் போன கேரள பாதிரியாரின் பிரேதத்தை போலீசார் கடற்கரையில் கண்டெடுத்தனர்.

கேரளா மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தின் புலிக்குன்னு பகுதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தை சேர்ந்த பாதிரியார் மார்ட்டின் சேவியர் வழச்சிரா (33).

இவர் இங்கிலாந்தில் உள்ள எடின்பர்க் நகரின் கார்ஸ்டோர்பைன் பகுதியை சேர்ந்த செயிண்ட் ஜான் பாப்டிஸ்ட் தேவாலயத்துக்கு சென்று தொண்டு ஊழியம் செய்துவந்தார்.

இதற்கிடையே, மார்ட்டின் சேவியர் கடந்த நான்கு தினங்களுக்கு முன் காணாமல் போனார். இதுகுறித்து தேவாலய நிர்வாகத்தினர் எடின்பர்க் நகர போலீசில் புகார் செய்தனர்.

இந்நிலையில், நேற்று எடின்பர்க் கடற்கரையில் வாக்கிங் சென்ற மக்கள் அங்கு ஒரு பிரேதம் கிடப்பதை கண்டு அதிர்ந்தனர். உடனே போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.


தகவலறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று, பிரேதத்தை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் அது காணாமல் போன கேரள பாதிரியார் மார்ட்டின் சேவியர் என தெரியவந்தது.

இதையடுத்து, போலீசார் செயின்ட் ஜான் பாப்டிஸ்ட் தேவாலய நிர்வாகத்துக்கு தகவல் கொடுத்தனர்.

இங்கிலாந்து கடற்கரையில் கேரள பாதிரியார் பிரேதம் கண்டெடுக்கப்பட்டது குறித்து கருத்து தெரிவித்த கேரளா எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதலா, இந்த விவகாரத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தலையிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.