வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, வலுப்பெற்று புயலாக மாற வாய்ப்பு உள்ளதால், தமிழகம் மற்றும் புதுவையில் அதிக கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்நிலையில் இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில், வங்கக் கடலில் நிலைக்கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும், அது 24 மணி நேரத்தில் மேலும் வலுவடைந்து புயலாக மாறும் என்றும் கூறப்பட்டது.
இந்த புயல் இலங்கை கடல் வழியாக 30-ம் தேதி வட தமிழகம்-தெற்கு ஆந்திரா கடல் பகுதியை நோக்கி நகரும். இதனால் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும். புயல் கரை கடக்கும்போது காற்றின் வேகம் 65 கிமீ வரை அதிகரிக்கலாம் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
புயல் கரையை கடக்கும்போது தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவையில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் இன்று தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் அரசுத்துறைகளின் உயர் அதிகாரிகள் கலந்துக் கொண்டனர்.
புதுச்சேரியிலும் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. விடுப்பு எடுத்த அனைத்து அரசுத்துறை அதிகாரிகளும் உடனடியாக பணிக்கு திரும்பும்படி முதல் மந்திரி நாராயணசாமி உத்தரவிட்டுள்ளார். #CycloneFani #TNRains