கொலை செய்யப்பட்ட ராஜா, கைதான சுரேஷ் 
உள்ளூர் செய்திகள்

தண்ணீர் பிடிக்கும் தகராறில் தொழிலாளி வெட்டிக்கொலை- பெயிண்டர் கைது

இருவருக்கும் தெரு குழாயில் தண்ணீர் பிடிப்பதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி:

தூத்துக்குடி மாவட்டம் முள்ளக்காடு அருகே முனியசாமி நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜா (வயது 45). உப்பள தொழிலாளி.

இவரது எதிர் வீட்டை சேர்ந்தவர் சுரேஷ் (40). பெயிண்டர். இவர்கள் இருவருக்கும் தெரு குழாயில் தண்ணீர் பிடிப்பதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரம் அடைந்த சுரேஷ், அரிவாளை எடுத்து ராஜாவின் தலையில் வெட்டினார். இதில் பலத்த காயமடைந்த ராஜா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்த கொலை குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற முத்தையாபுரம் சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் மற்றும் போலீசார், கொலை செய்யப்பட்ட ராஜா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் சம்பவ இடத்துக்கு தூத்துக்குடி நகர கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மதன் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

பின்னர் அவரது தலைமையிலான தனிப்படை போலீசார் பெயிண்டர் சுரேசை இரவோடு இரவாக கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.