பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தடை வட்டம், கைகளத்தூர் கிராமத்தில் பொங்கல் தின விழாவை முன்னிட்டு 2 சமூகத்தினருடைய பிரச்சனை ஏற்பட்டது. இதனை தொடர்ந்து காவல்துறையினர் தலைமையில் சுமூக பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இந்த பேச்சுவார்த்தை நடைபெற்ற கொண்டிருக்கும் பொழுதே ஒரு தரப்பை சேர்ந்த தேவேந்திரன் மற்றொரு தரப்பை சேர்ந்த தொழிலாளி மணி என்பவரை சரமாரியாக அரிவாளால் வெட்டினார். இதில் மணி சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதனால் அங்கு பரபரப்பும், பதட்டமும் உண்டானது. அங்கு கூடி இருந்தவர்கள் நாலாபுறமும்சிதறி ஓடினர். மேலும் அங்கு மோதல் அதிகரிக்கும் சூழல் உண்டானது. இதையடுத்து அங்கு கூடுதல் போலீசார் குவிக்கபப்ட்டனர்.
இதனை தொடர்ந்து கைகளத்தூர் போலீசார் விரைந்து சென்று மணியை கொலை செய்த தேவேந்திரனை மடக்கி பிடித்தனர். பின்பு அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் கொலை செய்யப்பட்ட மணியின் உறவினர்கள் கைகளத்தூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது. இதன் காரணமாக ஏராளமான போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.