தருமபுரி,
தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மகளிர் திட்டம் மூலம் மகளிர் சுய உதவி குழுக்களின் சிறுதானிய உணவகத்தினை மாவட்ட கலெக்டர் சாந்தி தொடங்கி வைத்து, பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம் மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் தயாரிக்கப்பட்ட சிறுதானிய உணவு வகைகள் விற்பனை செய்ய மதி சிறு தானிய உணவகம் திறந்து வைக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து, இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் சாந்தி கடத்தூர் மற்றும் காரிமங்கலம் வட்டாரத்தைச் சேர்ந்த 5 பயனாளிகளுக்கு பிரதம மந்திரியின் வீடு வழங்கும் திட்டத்தின்கீழ், ரூ.2.50 லட்சம் மதிப்பீட்டில் நிதி உதவிகளையும், கடத்தூர் வட்டாரத்தில் ஆண்டு செயல் திட்டத்தின்கீழ், மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்களுக்கு ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் அசோலா வளர்ப்பு மற்றும் தேன் வளர்ப்புக்கு கடன் உதவிகளையும் வழங்கினார்.
பின்னர், தருமபுரி அரசு கலைக்கல்லூரியில் நடைபெற்று வரும் தருமபுரி மாவட்ட கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வினை கலெக்டர் சாந்தி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்நிகழ்ச்சியில் மகளிர் திட்ட மாவட்ட திட்ட இயக்குநர் பத்ஹி முகமது நசீர், அரசு கலைக் கல்லூரி முதல்வர் கிள்ளிவளவன், உதவி திட்ட அலுவலர்கள், கல்லூரி பேராசிரியர்கள், வட்டார மேலாளர்கள், ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் சுய உதவி குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.