உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே திருமூர்த்தி அணை, பஞ்சலிங்க அருவி பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள நீச்சல் குளம் மற்றும் திருமூர்த்தி அணை பூங்கா ஆகிய பகுதிகளில் விடுமுறையையொட்டி சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இதே போல அமராவதி அணை பூங்கா மற்றும் அருகில் உள்ள முதலைப் பண்ணைகளுக்கும் வெளியூர் மற்றும் வெளி மாவட்ட ,மாநில சுற்றுலா பயணிகளின் வருகை அதிக அளவில் இருந்தது.
ஞாயிற்றுக்கிழமை காலை முதலில் திருமூர்த்தி அணைக்கு சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் அதிக அளவில் வந்தன. அணையின் கரைகளில் அமர்ந்து இயற்கையை ரசித்த சுற்றுலா பயணிகள் பஞ்சலிங்க அருவியில் விழுந்த மிதமான தண்ணீரில் குளித்து அமணலிங்கேஸ்வரர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து அணை பகுதியில் உள்ள வண்ண மீன் காட்சியகத்தை கண்டுகளித்தனர். குழந்தைகளோடு பூங்காவில் அமர்ந்தும் அணையின் கரையோரப் பகுதியில் அமர்ந்தும் உணவு உண்டு மகிழ்ந்தனர்.
இதே போல் அமராவதி அணைக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் பலர் அணையின் அருகே அமைந்துள்ள முதலைப்பண்ணைக்கு சென்று முதலைகளை கண்டு மகிழ்ந்ததோடு முதலைப் பண்ணைக்குள் அமைக்கப்பட்டுள்ள விளையாட்டு பூங்காவில் குழந்தைகளுடன் விளையாடி பொழுது போக்கினர்.