கைது 
உள்ளூர் செய்திகள்

திருவள்ளூர் அருகே கியாஸ் சிலிண்டர் மானியத்தில் முறைகேடு- ஊழியர் கைது

ஊத்துக்கோட்டை பகுதியில் பொதுமக்களுக்கு 2015-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரை வழங்கிய கியாஸ் சிலிண்டர் மானியத்தில் ரூ.18 லட்சத்து 29 ஆயிரத்து 379 முறைகேடு நடந்திருப்பது தெரிய வந்தது.

மாலை மலர்

திருவள்ளூர்:

திருவள்ளூர் மாவட்ட கூட்டுறவு சங்கங்களில் அரசு வழங்கும் கியாஸ் சிலிண்டர் மானியத்தில் முறைகேடு நடந்திருப்பதாக திருவள்ளூர் மாவட்ட துணை பதிவாளர் கார்த்திகேயன் என்பவர் வணிகவியல் குற்றப் புலனாய்வு பிரிவு போலீஸ் சூப்பிரண்டு பழனி குமாரிடம் புகார் அளித்தார்.

இதையடுத்து திருவள்ளூர் வணிகவியல் குற்ற புலனாய்வுத்துறை இன்ஸ்பெக்டர் பெருந்துறை முருகன் மற்றும் போலீசார் ஊத்துக்கோட்டை கியாஸ் சிலிண்டர் மையத்தில் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் போது ஊத்துக்கோட்டை பகுதியில் பொதுமக்களுக்கு 2015-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரை வழங்கிய கியாஸ் சிலிண்டர் மானியத்தில் ரூ.18 லட்சத்து 29 ஆயிரத்து 379 முறைகேடு நடந்திருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து ஊத்துக்கோட்டை கியாஸ் சிலிண்டர் மையத்தின் இளநிலை உதவியாளர் எழிலரசன் கைது செய்யப்பட்டார்.

இவர் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியை சேர்ந்தவர். கைதான எழிலரசன் திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு திருவள்ளூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.