உள்ளூர் செய்திகள்

ஏ.பி. முருகானந்தத்துக்கு கொலை மிரட்டல்- கோவை கமிஷனர் அலுவலகத்தில் புகார்

கிருஷ்ணகிரி அருகே நடுரோட்டில் பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை புகைப்படத்தை ஆட்டிற்கு அணிவித்து, அந்த ஆட்டின் தலையை கொடூரமாக வெட்டினர்.கொலை மிரட்டல் விடுத்த அந்த நபர் யார்? என்பதை கண்டறிந்து அவர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கோவை:

பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுச்செயலாளர் ஏ.பி.முருகானந்தம், நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் திருப்பூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். இவர் இன்று கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.

கிருஷ்ணகிரி அருகே நடுரோட்டில் பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை புகைப்படத்தை ஆட்டிற்கு அணிவித்து, அந்த ஆட்டின் தலையை கொடூரமாக வெட்டினர்.

இதற்கு நான் கண்டனம் தெரிவித்து, கடந்த 7-ந்தேதி எனது பேஸ்புக் பக்கத்தில் கருத்துக்கள் பதிவிட்டிருந்தேன்.

அதற்கு தேவராஜ் என்ற முகநூல் ஐ.டி. மூலமாக ஒரு நபர் என்னை தகாத வார்த்தைகளால் திட்டியதுடன், எனது கழுத்தை துண்டாக வெட்டி கொலை செய்து விடுவதாக மிரட்டும் வகையில் கருத்துக்களை பதிவிட்டிருந்தார்.

எனவே எனக்கு கொலை மிரட்டல் விடுத்த அந்த நபர் யார்? என்பதை கண்டறிந்து அவர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.

இந்த புகார் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.