உள்ளூர் செய்திகள்

ஆண்டகளூர் கேட் ஓட்டலில் மர்மமான முறையில் இறந்து கிடந்த டிரைவர்

ஆண்டகளூர் கேட் தாபா ஓட்டலில் மர்மமான முறையில் இறந்து கிடந்த டிரைவர் ராசிபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ராசிபுரம்,

ராசிபுரம் அருகே உள்ள ஒரு தாபா ஓட்டலில் நேற்று இரவு 2 பேர் மோட்டார்சைக்கிளில் குடிபோதையில் வந்தனர். அவர்கள் இருவரும் அங்கு சாப்பிட்டுள்ளனர். 

போதை அதிகமானதால் அவர்கள் இருவரும் அங்குள்ள கொட்டகையில் படுத்து தூங்கி விட்டதாக தெரிகிறது.  இரவு சுமார் 9 மணிக்கு மேல் ஆனதால் தாபா ஓட்டலை ஊழியர்கள் பூட்டி விட்டு சென்றுவிட்டனர். 

இன்று காலையில் அங்கு தூங்கிய 2 பேரில் ஒருவர் எழுந்தார். தூங்கிக்கொண்டிருந்த மற்றெருவரை அவரும், தாபா ஓட்டலில் வேலை பார்க்கும் தங்கராஜ் என்பவரும் முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்ப முயன்றுள்ளனர். ஆனால் அவர் கண் விழித்து பார்க்க வில்லை. எழுந்திருக்கவும் இல்லை. அப்போது அவர் இறந்தது  தெரியவந்தது.

இது பற்றி தகவல் அறிந்த ராசிபுரம் போலீசார், அங்கு வந்து விசாரித்ததில் இறந்தவர் பூவரசன் என்பதும் அவர் நாமகிரிப்பேட்டையைச் சேர்ந்த லாரி டிரைவர் என்பதும்  உடன் வந்தவர் அதே ஊரைச் சேர்ந்த அவரது நண்பர் முனிராஜா என்பது தெரிந்தது.  இதையடுத்து போலீசார், பூவரசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

 பூவரசன் எப்படி இறந்தார்? என்பது அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். மேலும் அவரது நண்பர் முனிராஜாவிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

எப்போதும் பரபரப்பாக இருக்கும் ஆண்டலூர் கேட் தாபா ஓட்டலில் டிரைவர் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.