உள்ளூர் செய்திகள்

குடிசை வீட்டில் தீ பிடித்து பெண் உடல் கருகி உயிரிழப்பு

சரஸ்வதி வீட்டிற்குள் உடல் கருகிய நிலையில் பிணமாக கிடந்தது தெரிய வந்தது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

பள்ளிபாளையம்:

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் எலந்த குட்டை அடுத்த சின்னம்மாள் காடு கட்டிப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சரஸ்வதி என்கிற கஸ்தூரி (43). இவர் கணவரை விட்டுப் பிரிந்து தனியாக வசித்து வந்தார். இவர் தனது தந்தையின் வீட்டிற்கு அருகில் குடிசை வீட்டில் குடியிருந்து வந்தார்.

இன்று அதிகாலை 4 மணிக்கு கஸ்தூரி டீ வைக்க விறகு எடுத்து பற்றவைத்தபோது எதிர்பாராத விதமாக தீ குடிசையில் பற்றியது.

இதையடுத்து வீட்டில் இருந்து வெளியே வந்த கஸ்தூரி வீடு தீ பிடித்து விட்டதாக அருகில் குடியிருந்த தனது தந்தையை சத்தம் போட்டு எழுப்பினார். பின்னர் மீண்டும் கஸ்தூரி வீட்டுக்குள் பொருட்கள் எடுக்க சென்றார். அப்போது வெளியே வரமுடியாமல் தீயில் அவர் மாட்டிக்கொண்டார்.

இது குறித்து தகவல் அறிந்த வெப்படை தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அனைத்தனர். அப்போது சரஸ்வதி வீட்டிற்குள் உடல் கருகிய நிலையில் பிணமாக கிடந்தது தெரியவந்தது. இதையடுத்து தீயணைப்புத்துறை மூலம் உடலை மீட்டு குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வெப்படை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT