கன்னியாகுமரி :
குமரி மாவட்டம் குலசேகரம் அருகே கொக்கோட்டு மூலை கிராமத்தில் சிலம்பம் பயிற்சிப் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியின் நிறுவனர் மற்றும் பயிற்சியாளராக மாலதி ராதாகிருஷ்ணன் உள்ளார்.
இந்தப் பயிற்சிப் பள்ளி மாணவர்களான தனுஷா ராதாகிருஷ்ணன் (வயது 15), ஜெனீஷ் ( 9), ராம்ஹரி (14), பெர்லின் ஜோ (14), ஜே. ஜெனீஷ் (18), அபினேஷ் (19), ராம் கார்த்திக் (17), ராகுல் கார்த்திக் (17), அகில் (21) ஆகிய 9 பேர் அடங்கிய குழுவினர் கடந்த வாரம் உத்தரப்பிரதேசம் மாநிலம் மதுரா நகரில் இளையோர் மேம்பாட்டு விளையாட்டுக் கழகம் என்ற அமைப்பு நடத்திய தேசிய அளவிலான சிலம்பாட்டப் போட்டியில் கலந்து கொண்டனர்.
இதில் தனிஷா ராதாகிருஷ்ணன், ஜெனீஷ், ராம்ஹரி, அபினேஷ், ராம்கார்த்திக், அகில் ஆகியோர் தங்கப் பதக்கங்களையும், பெர்லின், ஜே. ஜெனீஷ், ராகுல் கார்த்திக் ஆகியோர் வெள்ளி பதக்கங்களையும் வென்றனர். இதையடுத்து சொந்த கிராமத்திற்கு வந்த அவர்களை ஊர்மக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.