முட்டப்பதி அய்யா வைகுண்டசாமி கோவிலில் இன்று காலை கொடியேற்றம் நடந்த போது எடுத்த படம். 
உள்ளூர் செய்திகள்

கன்னியாகுமரி அருகே முட்டப்பதி அய்யா வைகுண்டசாமி கோவிலில் பங்குனி தேரோட்ட திருவிழா

இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியதுதிருவிழா அடுத்த மாதம் (ஏப்ரல்) 3-ந்தேதி தேதி வரை 11 நாட்கள் தொடர்ந்து நடக்கிறது.

கன்னியாகுமரி:

கன்னியாகுமரி அருகே உள்ள முட்டப்பதியில் அய்யா வைகுண்ட சாமி கோவில் பங்குனி தேரோட்ட திருவிழா இன்று காலை கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. திருவிழா அடுத்த மாதம் (ஏப்ரல்) 3-ந்தேதி தேதி வரை 11 நாட்கள் தொடர்ந்து நடக்கிறது.

இதையொட்டி 1-ம் திருவிழாவான இன்று(24-ந் தேதி) அதிகாலை 5.30 மணிக்கு திருக்கொடியேற்றம் நிகழ்ச்சி நடந்தது. கொடிபட்டத்தை மலர்களால் அலங்கரித்து கோவிலை சுற்றி மேளதாளம் முழங்க ஊர்வலமாக எடுத்து வந்தனர். பின்னர் கோவிலின் முன்புறம் உள்ள கொடிமரத்தில் மேளதாளங்கள் மங்கல இசை மற்றும் சங்கு நாதம் முழங்க "அய்யா அரகர சிவசிவ" என்ற பக்தி கோஷம் விண்ணதிர கொடி ஏற்றப்பட்டது.

முட்டப்பதி தலைமை தர்மகர்த்தா பாலசுந்தரம் கொடி ஏற்றி வைத்தார். நிகழ்ச்சியில் ஏராளமான அய்யாவழி பக்தர்கள் கலந்து கொண்டனர். அதன்பின்னர் முட்டப் பதி கடலில் அய்யா வழி பக்தர்கள் தீர்த்தமாடி பதமிடும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் உச்சிப்படிப்பு, அன்ன தர்மம் போன்ற நிகழ்ச்சிகளும் நடந்தது. இரவு 7 மணிக்கு அய்யா கருட வாகனத்தில் எழுந் தருளி கோவிலை சுற்றி மேளதாளங்கள்முழங்க வலம் வரும் நிகழ்ச்சி நடக்கிறது.

2-ம் திருவிழா வான நாளை (25-ந்தேதி) முதல் 7-ம் திருவிழாவான 30-ந் தேதி வரை தினமும் பணி விடைகள், உச்சிப் படிப்பு, தர்மங்கள் மற்றும் இரவு வாகன பவனி போன்றவை நடக்கிறது. 2 மற்றும் 3-ம் திருவிழா அன்று இரவு 7.30 மணிக்கு அய்யா கருட வாகனத்திலும், 4 மற்றும் 5-ம் திருவிழா அன்று இரவு 7.30 மணிக்கு அன்னவாகனத்திலும், 6-ம் திருவிழா அன்று இரவு 7.30 மணிக்கு சர்ப்ப வாகனத்திலும், 7-ம்திருவிழாஅன்றுஇரவு 7.30மணிக்கு அய்யாகருட வாகனத்திலும் பவனி வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

8-ம் திருவிழாவான 31-ந்தேதி அதிகாலை 4 மணிக்கு அய்யாவுக்கு பணிவிடையும் அதைத்தொடர்ந்து உகப்படிப்பும் நடக்கிறது. பகல் 12 மணிக்கு உச்சிப் படிப்பு, பால்அன்னதர்மம் போன்றவை நடக்கிறது. இரவு 7 மணிக்கு அய்யா வைகுண்டசாமி பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட குதிரை வாகனத்தில் எழுந்தருளி கோவிலில் இருந்து மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக புறப்பட்டு ஒற்றையால்விளை, மாதவபுரம் வழியாக முட்டப்பதி வரை பவனி வந்து வடக்கு வாசலுக்கு எதிரே அமைந்துஉள்ள கடலில் கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 11 மணிக்கு அன்னதர்மம் நிகழ்ச்சி நடக்கிறது.

9 மற்றும் 10-ம் திருவிழா நாட்களில் இரவு 7.30 மணிக்கு சப்பர வாகனத்தில் எழுந்தருளி கோவிலை சுற்றி பவனி வரும் நிகழ்ச்சி நடக்கிறது.11-ம் திருவிழாவான 3-ந்தேதி பகல் 12 மணிக்கு அய்யா தேரில் எழுந்தருளி பதியை சுற்றி வலம் வரும் தேரோட்ட நிகழ்ச்சி நடக்கிறது. 4-ந் தேதி திருக்கொடி இறக்க நிகழ்ச்சியும் தான தர்மங்களும் நடக்கிறது.

திருவிழாவுக்கான ஏற்பாடு களை முட்டப்பதி தலைமை தர்மகர்த்தா பாலசுந்தரம், தர்மகர்த்தா செல்வராஜ் ஆகியோர் செய்து வருகிறார்கள்.