தஞ்சாவூர்:
தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணா பிறந்த தினத்தை முன்னிட்டு தஞ்சை அன்னை சத்யா மைதானத்தில் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள் போட்டியை எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் எம்.பி., கலெக்டர் தீபக்ஜேக்கப் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
தஞ்சை அன்னை சத்யா விளையாட்டு அரங்கத்தில் இருந்து தொடங்கிய சைக்கிள் போட்டி பாலாஜி நகர், ஈஸ்வரி நகர், மருத்துவ கல்லூரி சாலை வழியாக பிள்ளையார்பட்டி புறவழி சாலை சென்று மீண்டும் அதே வழியாக விளையாட்டு அரங்கத்திற்கு வந்தடைந்தது.
சைக்கிள் போட்டிகள் 13 வயதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கு 15 கி.மீ. தூரமும், 15 மற்றும் 17 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு 20 கி.மீ. தூரமும், 13 வயதிற்கு உட்பட்ட மாணவிகளுக்கு 10 கி.மீ., 15 மற்றும் 17 வயதுக்கு உட்பட்ட மாணவிகளுக்கு 15 கி.மீ. தூரமும் நடைபெற்றது.
முதல் மூன்று இடங்களில் வெற்றி பெறும் மாணவ- மாணவிகளுக்கு பரிசு தொகையாக தலா ரூ.5000, ரூ.3000, ரூ.2000 வீதமும் 4 முதல் 10-ம் இடம் வரை பிடிப்பவர்களுக்கு தலா ரூ.250 மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.
இதில் ஏராளமான மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு அலுவலர் டேவிட் டேனியல், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மதன்குமார், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் கற்பகம், பயிற்றுநர்கள் விளையாட்டு இயக்குனர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.