உள்ளூர் செய்திகள்

சென்னையில் 476 மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றம்

தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு குப்பை மற்றும் கட்டிட கழிவுகள் அகற்றப்பட்டன.இரவு தூய்மை பணியில் 450-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

சென்னை:

சென்னை மாநகரை தூய்மையான நகரமாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மாநகராட்சி பல்வேறு கட்ட தூய்மை பணிகளை மேற்கொண்டு வருகிறது.

பூங்காக்கள், சுரங்கப்பாதைகள், மேம்பாலங்கள், பஸ் நிழற் கூடங்கள் போன்றவற்றில் தீவிர தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு குப்பை மற்றும் கட்டிட கழிவுகள் அகற்றப்பட்டன.

இதைத் தொடர்ந்து பஸ் போக்குவரத்து உள்ள சாலைகள், நடைபாதைகளில் உள்ள குப்பைகள் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள வாகனங்கள், கடைகள் போன்றவற்றை அகற்றும் தீவிர தூய்மை பணிகள் கடந்த 21-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த 3 நாட்களில் 476 மெட்ரிக் டன் குப்பை மற்றும் கட்டிட கழிவுகள் அகற்றப்பட்டன. இரவு தூய்மை பணியில் 450-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

ஓ.எம்.ஆர். பிரதான சாலை, ஒக்கியம் பஸ் நிழற் கூடம், நடைபாதைகள், தண்டையார்பேட்டை, அம்பத்தூர் மண்டலங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் தூய்மை பணிகள் நடந்தன. இரவு நேரத்தில் நடப்பதால் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் துரிதமாக நடைபெற்றது.

மாநகராட்சி மேயர் பிரியா, கமிஷனர் குமரகுருபரன் மற்றும் மண்டல அலுவலர்கள் தூய்மை பணிகளை இரவில் ஆய்வு செய்து தீவிரப்படுத்தினார்கள். மாநகர பஸ்கள் செல்லும் 100 வழித்தடங்களில் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டு தூய்மை பணி 27-ந்தேதி வரை நடைபெறுகிறது.

SCROLL FOR NEXT