திருச்செந்தூர்-நெல்லையப்பர் கோவில் யானைகளுக்கு கொரோனா பரிசோதனை 
செய்திகள்

திருச்செந்தூர்-நெல்லையப்பர் கோவில் யானைகளுக்கு கொரோனா பரிசோதனை

நலவாழ்வு முகாமுக்கு செல்வதற்காக திருச்செந்தூர் மற்றும் நெல்லையப்பர் கோவில் யானைகளுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.

மாலை மலர்

திருச்செந்தூர் :

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டி வனபத்திரகாளி அம்மன் கோவில் அருகில் பவானி ஆற்றுப்படுகையில் ஆண்டுதோறும் யானைகள் நலவாழ்வு முகாம் 48 நாட்கள் நடத்தப்படுகிறது.

இந்த ஆண்டு யானைகள் நலவாழ்வு முகாம், வருகிற 8-ந்தேதி தொடங்குகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக, முகாமில் பங்கேற்கும் அனைத்து யானைகள் மற்றும் பாகன்களுக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது.

அதன்படி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் தெய்வானை யானையும் நலவாழ்வு முகாமுக்கு செல்கிறது. இதையடுத்து கால்நடை பராமரிப்பு துணை இயக்குனர் தலைமையிலான மருத்துவ குழுவினர், தெய்வானை யானைக்கு நேற்று கொரோனா பரிசோதனை நடத்தினர்.

இதில் யானைக்கு கொரோனா தொற்று இல்லை என்பதும், நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதும் தெரியவந்தது. தொடர்ந்து நலவாழ்வு முகாமுக்கு செல்வதற்கு தெய்வானை யானை தயாராகி வருகிறது.

இதேபோன்று நலவாழ்வு முகாமில் நெல்லையப்பர் கோவில் காந்திமதி யானையும் பங்கேற்கிறது. இதற்காக காந்திமதி யானைக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. யானையின் சளி மாதிரியை சேகரித்து, ஆய்வக பரிசோதனைக்காக சென்னை கால்நடை மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து பாகனுக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட உள்ளது.

நாளை மறுநாள் (சனிக்கிழமை) காந்திமதி யானை, லாரியில் ஏற்றப்பட்டு, நலவாழ்வு முகாமுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.