சிந்த்வாரா:
மத்திய பிரதேசத்தின் சிந்த்வாராவில் உள்ள தனியார் பள்ளிக்கூடம் ஒன்றில், நேற்று சுமார் 800 மாணவ-மாணவிகள் காலை ஜெபத்துக்காக அணிவகுத்து நின்றனர். அப்போது அருகில் உள்ள குளிர்பதன கிடங்கு ஒன்றில் இருந்து திடீரென அமோனியா வாயு கசிந்தது.
இந்த விஷவாயுவை சுவாசித்த 50 மாணவ-மாணவிகளுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனே அவர்களை அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக ஆசிரியர்கள் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்ற பின் மாணவ-மாணவிகள் வீடு திரும்பினர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட கலெக்டர் மற்றும் போலீஸ் அதிகாரிகள் பள்ளிக்கு விரைந்து சென்று, மற்ற மாணவ-மாணவிகள் அனைவரையும் வெளியேற்றினர். மேலும் தீயணைப்பு மற்றும் ஆம்புலன்ஸ் வாகனங்களும் பள்ளிக்கு வரவழைக்கப்பட்டன.
குளிர்பதன கிடங்கில் வைத்திருந்த சிலிண்டர் ஒன்றில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக இந்த வாயு கசிந்ததாக கூறப்படுகிறது. எனினும் இந்த சம்பவத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்துமாறு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி குளிர்பதன கிடங்கு அதிபரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.