சிலர் விடாமல் எந்நேரமும் செல்போனை குடைந்து கொண்டே இருப்பார்கள். கண் சோர்ந்து தானே மூடும் வரை இந்த வேலையைச் செய்வார்கள். இப்பழக்கம் உடையவர்கள், இது மிகவும் ஆபத்தானது என்பதனை உணர்ந்து தானே முயற்சி செய்து வெளிவர வேண்டும். சிறிது நேரம் நல்ல புத்தகம் படியுங்கள். வெளியில் சென்று விளையாடுங்கள். செல்போனை அவசியத்திற்கு மட்டுமே பயன்படுத்துங்கள். மணிக்கணக்கில் போனில் பேசுவதும் உடலுக்கு அநேகத்தீமைகளை அளிக்கும்.
மிக முக்கியமான பேச்சுவார்த்தை நடைபெறும்போது பலர் செல்போனை கையில் வைத்து பார்த்த படியே இருப்பார்கள். இது மற்றவரை மிகவும் மதியாத செயலாகி விடும். பிறருடன் பேசும் போது போனை தள்ளி வையுங்கள்.
முதல் நாள் இரவு சரியான தூக்கம் இல்லையா? படுக்கையில் புரண்டு படுத்து, பழைய வாழ்க்கை சம்பவங்களை யோசித்து வருந்தி பின்பு வெகு நேரம் சென்று தூங்குவர். சமீபத்திய ஆய்வுகள் இத்தகையோர் மறுநாள் அதிக இனிப்புகளை சாப்பிடுவதாகக் கூறுகின்றது. மேலும் இவர்களுக்கு உடல் வீக்கம் ஏற்படுகின்றது. காலப் போக்கில் இவர்களுக்கு எடை கூடுதல், சர்க்கரை நோய் பாதிப்பு ஆகியவை ஏற்படுகின்றன.