முகம் எவ்வளவு அழகாக இருந்தாலும், சிரிக்கும்போது பற்கள் மஞ்சள் நிறமாக இருந்தால் அது பலருக்கும் தன்னம்பிக்கையைக் குறைத்துவிடுகிறது.
காபி, டீ அதிகமாகக் குடிப்பது, முறையற்ற பற்கள் பராமரிப்பு மற்றும் சில உணவுப் பழக்கவழக்கங்களால் பற்களில் இந்த மஞ்சள் கறை ஏற்படுகிறது.
இனி இதற்காகக் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. உங்கள் வீட்டிலேயே இருக்கும் எளிய பொருட்களைக் கொண்டு, பற்களை முத்துப்போல பளிச்சென்று மாற்றலாம்.
ஆலமரக்குச்சி அல்லது வேப்பங்குச்சி..
கிராமப்புறங்களில் பாரம்பரியமாகப் பயன்படுத்தப்படும் வேப்பங்குச்சி அல்லது ஆலமரக்குச்சியைக் கொண்டு பற்களைத் துலக்கலாம். குச்சியின் நுனியைப் பற்களால் மென்று பிரஷ் போல மாற்றி, பற்களைத் தேய்க்க வேண்டும்.
இதில் உள்ள இயற்கை கிருமிநாசினிகள் பற்களின் மஞ்சள்தன்மையைப் போக்குவதோடு, ஈறுகளையும் பலப்படுத்தும்.
துளசி இலை பேஸ்ட்..
சில துளசி இலைகளைக் வெயிலில் காயவைத்து அரைத்து பொடியாக்கி, அதனுடன் சிறிதளவு கடுகு எண்ணெய் கலக்கவும். இந்த கலவையைக் கொண்டு பற்களை விரல்களால் மெதுவாகத் தேய்த்துக் கழுவ வேண்டும்.
துளசி பற்களை வெண்மையாக்குவதோடு வாய் துர்நாற்றத்தையும் முழுமையாக நீக்கும்.
வெதுவெதுப்பான உப்பு நீர்..
தினமும் சாப்பிடுவதற்கு முன்பும் சாப்பிட பிறகும் வெதுவெதுப்பான நீரில் சிறிதளவு உப்பைக் கலந்து வாயை கொப்பளிக்க வேண்டும். இவ்வாறு செய்வது பற்களில் கறை படியாமல் இருக்கும்.
பிரஷ் மாற்றும் கால அளவு..
நமது டூத் பிரஷை 3 மாதங்களுக்கு ஒருமுறை கண்டிப்பாக மாற்ற வேண்டும். தேய்ந்த பிரஷ்கள் பற்களில் உள்ள கறைகளை நீக்காது. நன்றாக சாப்ட் ஆனா பிரஷ் பயன்படுத்தினாலும் தவறில்லை, அதிகமாக பற்களை தேய்க்க கூடாது.
வாழைப்பழத் தோல்..
வாழைப்பழம் சாப்பிட்ட பிறகு அதன் தோலைத் தூக்கி எறிய வேண்டாம். தோலின் உள்பகுதியை கொண்டு பற்களின் மேல் 2 நிமிடங்களுக்கு நன்றாகத் தேய்க்கவும். அதன் பிறகு 5 நிமிடங்கள் கழித்து பற்களைத் துலக்கலாம்.
வாழைப்பழத் தோலில் உள்ள பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் மாங்கனீசு போன்ற தாதுக்கள் பற்களை வெண்மையாக்க உதவுகின்றன.
சிம்பிள் சீக்ரெட்..
காபி, டீ அல்லது குளிர் பானங்கள் குடித்த பிறகு உடனடியாக வாயைக் கொப்பளிக்கும் பழக்கத்தை பழகிக்கொள்ளுங்கள்.
தினமும் காலை எழுந்ததும், இரவில் தூங்குவதற்கு முன்பும் ஒருமுறை பற்களைத் துலக்குவது பற்களின் ஆரோக்கியத்தைக் காக்கும்.