சர்க்கரை நோய், ரத்தத்தில் கொழுப்பு அளவு அதிகரித்தல், உயர் ரத்த அழுத்தம், புகைப் பழக்கம், மரபியல் ரீதியாக வருவது என்பன போன்றவையே இதய நோய்கள் வருவதற்கான காரணங்கள். இந்தக் காலத்தில் இளம் வயதினரும்கூட இதயம் தொடர்பான பிரச்சினையுடன் மருத்துவமனைக்கு வருவது வேதனை.
நாளின் பெரும்பகுதி நேரமும் அலுவலக வேலையாகவே இருப்பது, கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிடுவது, கார்பனேட்டட் குளிர்பானங்களை அதிகமாகக் குடிப்பது, உடற்பயிற்சிகள் செய்யாமலேயே இருப்பது போன்ற பழக்க வழக்கங்களைக் கொண்டவர்கள் தாங்களாகவே இதய நோய் வருவதற்கான வாய்ப்புகளை அதிகரித்துக் கொள்கின்றனர்.
இளம்வயதில் பெண்களுக்கு மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பு மிகமிகக் குறைவு. அவர்களுக்கு இயற்கையாகவே ஹார்மோன் பாதுகாப்பு உள்ளது. இதய வால்வு பிரச்சினைகளால் அதிக அளவில் இளம்பெண்கள் பாதிக்கப்படுகின்றனர். கர்ப்பிணிப் பெண்ணுக்கு இதய வால்வு பிரச்சினை ஏற்பட ருமாடிக் காய்ச்சலும் ஒரு காரணம். சுகாதாரம் இல்லாத சூழ்நிலையில் பரவும் ஒருவகை பாக்டீரியாவால் தொண்டை வலியுடன் இந்தக் காய்ச்சல் ஏற்படும். இந்த பாக்டீரியா இதய வால்வுகளைப் பழுதடையச் செய்துவிடும்.
ஆண், பெண் என இருவருக்கும் இந்த காய்ச்சல் வரலாம். இருப்பினும் பெண்கள்தான் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். இந்த காய்ச்சல் வந்த பெண்களுக்கு, நடந்தால் மூச்சு வாங்குதல், மூச்சுத் திணறல் போன்ற பிரச்சினைகள் ஏற்படும். அப்போதே என்ன பிரச்சினை என்று கண்டறிந்தால் எளிதில் குணப்படுத்தி விடலாம்.
ஆனால், இதுபற்றிய விழிப்புணர்வு நம் மக்கள் மத்தியில் குறைவாகவே இருப்பதால் அதிக எண்ணிக்கையிலான மக்கள் நோய் முற்றிய நிலையில் மருத்துவமனைக்கு வருகின்றனர். எண்ணையில் பொரித்த உணவு வகைகளைக் கூடுமானவரை தவிர்த்துவிட வேண்டும்.
நடக்கும்போது மூச்சு வாங்கினாலோ அல்லது நெஞ்சு படபடப்பு இருந்தாலோ உடனடியாக மருத்துவரை அணுகிப் பரிசோதனை செய்துகொள்வது அவசியம். வருடத்துக்கு ஒரு முறையாவது முழு உடல் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
நிறையப் பேருக்கு மாரடைப்புக்கான அறிகுறியே தெரியாது. சாதாரண கை வலி, நெஞ்சு எரிச்சல், வயிற்று வலி போலவே இருக்கும். வாயுத் தொந்தரவு என்று அசட்டை செய்யாமல் மருத்துவரை அணுகிப் பரிசோதித்துக்கொள்ள வேண்டும்.