தரவரிசை

Rajakili

ஒரு தொழிலதிபர் பிச்சைக்காரன் ஆனக்கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம்

arunkumar

கதைக்களம்

மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான இல்லத்தை நடத்தி வரும் சமுத்திரக்கனி, மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில், குப்பையில் இருப்பதை சாப்பிடும் தம்பி ராமையாவை அரவணைத்து தனது இல்லத்திற்கு அழைத்து வந்து பராமரிக்கிறார். அப்போது அவரிடம் இருக்கும் ஒரு டைரியை படிக்கும் போது அவரது வாழ்க்கையைப் பற்றி தெரிந்துக் கொள்கிறார். பெரும் செல்வந்தராகவும், தொழிலதிபராகவும் பல துறை தொழில்களை மேற்கொண்டவராக இருந்தவர் தம்பி ராமையா.

இவருக்கு மனைவி தீபாவுடன் சந்தோஷமான இல்ல வாழ்க்கை அமையாதலால். தம்பி ராமையா அவருக்கு பிடித்தமான பெண்ணை காதலித்து மீண்டும் திருமணம் செய்துக்கொள்கிறார். மீண்டும் மூன்றாம் முறை மற்றொரு பெண்ணை திருமணம் செய்ய ஆசைப்படுகிறார். இதற்காக இவர் ஒரு கொலை சம்பவத்தில் ஈடுப்படுகிறார். இதனால் போலீஸ் தேடும் குற்றவாளியாக மாறுகிறார். இதற்கு அடுத்து என்ன ஆனது? அத்தனை தொழிலுக்கு அதிபராக இருக்கும் ஒருவர் எப்படி நடுத்தெருவுக்கு வருகிறார்? அத்தனை மனைவிகள் இருந்தும் யாரும் இல்லாத அனாதையாக எப்படி ஆனார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

நடிகர்கள்

மனநலம் பாதிக்கப்பட்டவராக படத்தின் முதலில் நடித்து பார்வையாளர்களின் மனதில் பதிந்து விடுகிறார். அதற்கு பின் ஒரு செல்வந்தராக உலா வரும் தம்பி ராமையா அதற்கான நடை, உடை மற்றும் பாவனை என வித்தியாசம் காண்பித்து நடித்துள்ளார். அதன்பின் பெண்கள் மீதான மோகம் உடைய காட்சிகளில் சிறிது கோமாளித்தனத்துடன் சலிப்பை ஏற்படுத்துகிறது.

சிறிய கதாப்பாத்திரத்தில் நடித்தாலும் பெரும் பாதிப்பை பதித்துள்ளார் சமுத்திரகனி. தம்பி ராமையாவின் மனைவியாக நடித்து இருக்கும் தீபா சிறப்பான மற்றும் திறமையான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

தம்பி ராமையாவின் இரண்டாவது மனைவியாக நடித்திருக்கும் சுபா, இளம் காதலியாக நடித்திருக்கும் சுவேதா ஸ்ரீம்ப்டான், காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் அருள்தாஸ், பழ கருப்பையா, டேனியல் அனி போப், பிரவீன் குமார்.ஜி, ரேஷ்மா, வெற்றிகுமரன், விஜே ஆண்ட்ருஸ், மாலிக், , கிரிஷ், கிங் காங் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.

இயக்கம்

ஒரு செல்வந்தரின் வாழ்க்கை எப்படி அவர்களது இல்லங்களில் நடமாடும் சந்தேக பேய்களால் எப்படி பிரச்சனைகள் உருவாகிறது. ஆண்களின் சபலம் புத்தி எப்படி சறுகலை கொண்டு வருகிறது என்பதை மிகவும் அழுத்தமான கதையாக எழுதியுள்ளார் தம்பி ராமையா. அதனை திறம்பட காட்சிப்படுத்தியுள்ளார் இயக்குனர் உமாபதி ராமையா. உணர்வு பூர்வமான கிளைமாக்ஸ் காட்சி படத்தின் பெரிய பலம். படத்தின் முதல் பாதி காமெடி காட்சிகள் நிறைந்து பார்வையாளர்களை கவர்கிறது. ஆனால் இரண்டாம் பாதி சோதிக்கிறது. இரண்டாம் பாதியில் பெருமளவு கவர்ச்சி நிறைந்த காட்சி இடம் பெற்றுள்ளதால் முக சுலிப்பை ஏற்படுத்துகிறது. அந்த காட்சிகளும் திரைக்கதைக்கு பெருமளவு உதவவில்லை.

இசை

இசையமைப்பாளராக அறிமுகமாகியிருக்கும் தம்பி ராமையாவின் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசையமைத்திருக்கும் சாய் தினேஷ் பணி சிறப்பு.

ஒளிப்பதிவு

ஒளிப்பதிவாளர்கள் கேதார்நாத் - கோபிநாத் ஆகியோரது கேமரா, முருகப்பனின் பணக்கார வாழ்க்கையையும், பசி மிகுந்த வாழ்க்கையையும் எதார்த்தமாக காட்சிப்படுத்தியிருக்கிறது.

தயாரிப்பு

V House Productions நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.

வீடியோக்கள்

ராஜாகிளி