கதைக்களம்
சந்தானம் ஒரு தனியார் மேட்ரிமோனி கம்பனியில் பணியாற்றி வருகிறார். ஊருக்கெல்லாம் வரன் பார்க்கும் இவருக்கு பாவம் இன்னும் கல்யாணம் ஆகவில்லை. சந்தானத்திற்கு அம்மா, அப்பா குடும்பம் என யாரும் இல்லை. சொந்தமாக வீடு இருந்தால்தான் கல்யாணம் நடக்கும் என கடனில் வீட்டை வாங்கியிருப்பதால் பண நெருக்கடியில் சிக்கிக் கொண்டுள்ளார். கம்பனி வெப்சைட்டில் நல்ல பெண் வரன் கிடைத்தால் இவரே ஒரு அப்லிகேஷனை போட்டு அலப்பறை செய்து வருகிறார். அப்படி ஒரு நாள் சந்தானத்திற்கு ஜமீன் வரன் ஒன்று கிடைக்கிறது.
அவர்கள் போடும் கண்டிஷன் மாப்பிள்ளை அனாதையாக இருக்க வேண்டும் ஏனெனில் ஜமீன் சொத்து அவர்களை விட்டு வெளியே சென்று விடக்கூடாது என்ற நோக்கத்தில் அதை கூறுகிறார். ஜமீன் பெண்ணை திருமணம் செய்தால் மொத்த கடன் பிரச்சனையையும் தீர்ந்துவிடும் என நம்பி திருமணம் செய்து கொள்கிறார் சந்தானம். ஆனால் திருமணம் ஆகியப் பிறகு தான் தெரியவருகிறது ஜமீனின் அனைத்து சொத்துகளும் கடனில் உள்ளது என மொத்தத்தையும் வங்கி ஊழியர்கள் ஜப்தி செய்து விடுகின்றனர். அதற்கு பின் சந்தானத்தின் கடனால் அவர் குடும்பத்துடன் ஒரு பிரச்சனையில் சிக்கிக் கொள்கிறார். சந்தானம் கடனை எப்படி அடைத்தார்? அவரின் குடும்பத்தால் என்ன பிரச்சனை ஏற்பட்டது? என்பதே மீதிக்கதை.
நடிகர்கள்
படத்தில் ஏகப்பட்ட காமெடி கேரக்டர்கள் தங்களின் வழக்கமான கேரக்டருக்கு ஏற்ற நடிப்பை வழங்கி சிறப்பித்திருக்கிறார்கள். சந்தானம், தம்பி ராமையா, பால சரவணன் கூட்டணி அல்டிமேட் காம்போவாக அமைந்துள்ளது. இவர்கள் ஒருவருக்கொருவர் மாற்றி மாற்றி கவுண்டர் கொடுக்கும் காட்சிகள் கைத்தட்டலை பெற வருகிறது. காமெடி, டான்ஸில் மாஸ் காட்டியிருக்கிறார் சந்தானம். ஹீரோயின் பிரயாலயாவுக்கு இன்னும் நடிப்பதற்கான காட்சிகளை வழங்கியிருக்கலாம்.
இயக்கம்
ஆனந்த நாராயணன் காமெடி டிராக்கில் அதிகம் கவனம் செலுத்திருக்கிறார். காமெடி காட்சிகள் அதிகம் படத்தில் வொர்க் அவுட் ஆயிருந்தாலும் படத்தின் கதையில் கோட்டை விட்டுள்ளார். அதேசமயம் படத்தில் முதலில் சீரியஸாக சொல்லப்படும் விஷயத்தை கடைசியில் காமெடியாக கொண்டு செல்ல முயன்று சொதப்பியிருக்கிறார்கள். படத்தின் முதல் பாதி மிக சுவாரசியமாகவும் நகைச்சுவையாகவும் எடுத்து சென்றுள்ளார் இயக்குனர். ஆனால் அது இரண்டாம் பாதியில் இல்லை. வழக்கமான சந்தானம் படங்களில் இருக்கும் அனைத்து அம்சமும் இப்படத்தில் இருக்கிறது.
இசை
இமானின் இசையில் மாயோனே பாடல் ரசிக்க வைப்பதோடு, மாலு மாலு பாடல் வித்தியாசமாக படமாக்கப்பட்டுள்ளது. பின்னணி இசையில் வழக்கமான பாணியை கையாண்டிருக்கிறார்.
ஒளிப்பதிவு
ஓம் நாராயணன் அவரது வேலையை சிறப்பாக செய்துள்ளார். பாடலின் காட்சிகளை மிக அழகாக கையாண்டுள்ளார்.
தயாரிப்பு
கோபுரம் பிலிம்ஸ் சார்பாக ஜி.என் அன்பு செழியன் மற்றும் சுஷ்மிதா அன்புசெழியன் இணைந்து ’இங்க நான் தான் கிங்கு’ திரைப்படத்தை தயாரித்துள்ளனர்.