மல்லிகா ஷெராவாத் 
சினிமா

கதாநாயகர்கள் என்னை ஒதுக்குகிறார்கள் - மல்லிகா ஷெராவத்

பாலிவுட்டில் மிகவும் பிரபல நடிகையான மல்லிகா ஷெராவத், கதாநாயகர்கள் என்னை ஒதுக்குகிறார்கள் என்று சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார்.

கமல்ஹாசனுடன் ‘தசாவதாரம்’ படத்தில் நடித்தவர் மல்லிகா ஷெராவத். ஒஸ்தி படத்தில் சிம்புவுடன் ஒரு பாடலுக்கு நடனம் ஆடினார். ஜாக்கிசானுடன் ‘தி மித்’ என்ற சீன படத்திலும் நடித்துள்ளார். இந்தியில் அதிக படங்களில் நடித்து வந்த மல்லிகா ஷெராவத்துக்கு கடந்த 2 வருடங்களாக படங்கள் இல்லை.

நடிகர்களும் இயக்குனர்களும் அவரை ஒதுக்குவதால் தற்போது இணையதள தொடரில் நடிக்க ஆரம்பித்துள்ளார். திட்டமிட்டு தன்னை ஓரம்கட்டுவதாக அவர் தெரிவித்து உள்ளார். இதுகுறித்து மல்லிகா ஷெராவத் கூறியதாவது:-

“நான் சினிமாவை விட்டு விலகவில்லை. தொடர்ந்து படங்களில் நடிக்க ஆர்வமாகவே இருக்கிறேன். ஆனால் என்னை நடிக்க வைக்க மறுக்கின்றனர். நான் அடிக்கடி பெண் உரிமைகள் பற்றி பேசிவருகிறேன். படத்தில் நடிக்க வாய்ப்பு அளித்தால் நம்மிடமும் இப்படித்தான் பேசுவாள் என்று என்னை கதாநாயகர்கள் ஒதுக்குகிறார்கள்.

எனக்கு பதிலாக கதாநாயகர்கள் தங்கள் தோழிகளை நடிக்க வைக்கின்றனர். இதன் காரணமாக அதிக பட்சம் 30 பட வாய்ப்புகளை நான் இழந்து இருக்கிறேன். இதனால் வருத்தம் அடையவில்லை. இது எனது வளர்ச்சியைத்தான் காட்டுகிறது. நான் பெண்கள் பிரச்சினையை பற்றி பேசியபோது எனக்கு நாட்டு பற்று இல்லை என்று விமர்சித்தனர். என்னை சில நடிகைகள் தாக்கியும் பேசினார்கள். நான் இந்த நாட்டை நேசிக்கிறேன்.”

இவ்வாறு மல்லிகா ஷெராவத் கூறினார்.