ஊரில் மாடுகளை காப்பாற்றி அவற்றை பராமரிக்கும் மனிதராக நரேன் வாழ்கிறார். அவரைப் போலவே மாடுகள் மீது பாசம் கொண்டவராக அவரது மகன் விமலும் இருக்கிறார். அடிமாட்டுக்கு அனுப்பப்பட்ட ஒரு கன்றைக் காப்பாற்றி வளர்க்கும் விமல், அதற்கு பயிற்சி அளித்து மஞ்சுவிரட்டு போட்டிக்கான காளையாக உருவாக்குகிறார். பல ஆண்டுகளாக யாராலும் அடக்க முடியாத காளையின் உரிமையாளராக அவர் பெருமையுடன் வாழ்ந்து வருகிறார்.
இதற்கிடையே, விமல் ஒரு கொலை வழக்கில் சிக்கி ஜாமீனில் வெளி வருகிறார். அவரை கொலை செய்ய பலர் முயற்சிப்பதும், வாழ்க்கையில் பல பகைகள் உருவாகுவதும் கதைக்கு திருப்பங்களை ஏற்படுத்துகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் நாயகி சனஷ்கா ஸ்ரீயின் காதல் விமலின் வாழ்க்கையில் புதிய நம்பிக்கையை தருகிறது. ஆனால் எதிர்பாராத சம்பவங்கள் அவரின் வாழ்க்கையை மீண்டும் சிக்கலாக்குகிறது. இந்த பிரச்சனைகளில் இருந்து விமல் எப்படி மீள்கிறார்? அவரது காளை மீண்டும் மஞ்சுவிரட்டு களத்தில் சாதிக்கிறதா? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
மாடுகள் மீது பாசம் கொண்ட இளைஞராக விமல் வழக்கமான இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். மாஸ் ஹீரோ போல காளையை அடக்கும் வீரராக இல்லாமல், காளையின் உரிமையாளராக கெத்து காட்டும் கதாபாத்திரம் அவருக்கு வேறுபட்டதாக அமைந்துள்ளது. நாயகியாக நடித்துள்ள சனஷ்கா ஸ்ரீ அழகாக தோன்றுவதோடு, சில முக்கியமான காட்சிகளில் தனது கதாபாத்திரத்தை நன்றாக வெளிப்படுத்தியுள்ளார்.
முனீஷ்காந்த் நடித்திருக்கும் குணச்சித்திர வேடம் படத்திற்கு பலம் சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது. நட்டி நட்ராஜ் தனது வலுவான நடிப்பால் கதாபாத்திரத்தை சிறப்பாக எடுத்துச் செல்கிறார். நரேன், தீபா சங்கர், பால சரவணன் உள்ளிட்ட மற்ற நடிகர்களும் தங்களது வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.
இயக்குநர்
வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியை பின்னணியாக கொண்டு கமர்ஷியல் அம்சங்களுடன் கதையை சொல்ல முயற்சி செய்துள்ளார் இயக்குநர் கேந்திரன். நாயகனை சுற்றி நடக்கும் பகைமை மற்றும் உறவுகளை மையமாக வைத்து திரைக்கதையை நகர்த்தியுள்ளார். சில இடங்களில் பழைய படங்களின் சாயல் இருந்தாலும், அனைத்து தரப்பினரும் பார்க்கக்கூடிய பொழுதுபோக்கு படமாக இயக்கி இருக்கிறார்.
ஒளிப்பதிவு மற்றும் இசை
ஒளிப்பதிவாளர் பிரசன்னா எஸ்.குமார் மஞ்சுவிரட்டு காட்சிகளை இயல்பாக பதிவு செய்திருக்கிறார். டி.இமான் இசையில் பாடல்கள் பெரிதாக தாக்கம் ஏற்படுத்தவில்லை என்றாலும் பின்னணி இசை காட்சிகளுக்கு ஏற்ப பயணிக்கிறது.