சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடைய வாழ்க்கை வரலாறு விரைவில் திரைப்படமாக உருவாக உள்ளதாக சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது.
பெங்களூருவில் ஒரு சாதாரண பஸ் கண்டக்டராக வாழ்க்கையை தொடங்கி தன் உழைப்பால் இந்திய சினிமாவின் உச்சநட்சத்திரமாக உயர்ந்து இன்று உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களின் சம்பாதித்துள்ள ரஜினியின் வாழ்க்கை ஒரு விறுவிறுப்பான திரைப்படத்திற்கு கச்சிதமான கதையாகும்.
குறிப்பாக நடிகராக தொடங்கி, நட்சத்திரமாக உயர்ந்த பின்னும் இடைப்பட்ட காலத்தில் அவர் சந்தித்த சவால்களும், ஒவ்வொரு முறையும் அதை அவர் கடந்து வந்த விதமும் தமிழ் சினிமா ரசிகர்கள் அறிந்த ஒன்றே.
2002 தான் இயக்கிய பாபா பட தோல்விக்கு பின்னர் 3 ஆண்டுகள் திரையில் இருந்து விலகியிருந்த ரஜினி, 2005 இல் சந்திரமுகி மூலம் அதிரடியான ரீ என்ட்ரி கொடுத்தார்.
சந்திரமுகி இசை வெளியீட்டு விழாவில் பேசிய ரஜினி, "நான் யானை இல்ல; குதிரை. டக்குனு எழுதிருச்சிடுவேன்" என கூறியது இதற்கு சிறந்த உதாரணம்.
கடந்த சில காலமாகவே ரஜினிகாந்த் தனது சுயசரிதையை எழுதி வருவதாக செய்திகள் வந்த வண்ணம் இருந்தன.
தற்போது, அந்தச் சுயசரிதையை அடிப்படையாகக் கொண்டு அவரது வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுப்பது குறித்து தனது நெருங்கிய வட்டாரங்களுடன் அவர் ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதில் அவரது வாழ்க்கையின் முக்கியக் கட்டங்கள், சந்தித்த சவால்கள், திரையுலக வெற்றிகள் மற்றும் மறக்க முடியாத தருணங்கள் இதில் இடம்பெறவுள்ளன.
இருப்பினும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
முன்னதாக, ரஜினிகாந்தின் மகள் சௌந்தர்யா அளித்த ஒரு பேட்டியில், தனது தந்தை சுயசரிதை எழுதி வருவதை உறுதிப்படுத்தியிருந்தார்.
50 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் எனப் பல மொழிகளில் இதுவரை 170க்கும் மேற்பட்ட படங்களில் ரஜினிகாந்த் நடித்துள்ளார்.
பத்மபூஷன், பத்மவிபூஷன் மற்றும் திரையுலகின் உயரிய விருதான 'தாதாசாகேப் பால்கே' விருதுகளை அவர் பெற்றுள்ளார்.
வரிசைகட்டும் படங்கள்
தற்போது நெல்சன் இயக்கத்தில் 'ஜெயிலர் 2' திரைப்படத்தில் அவர் நடித்து வருகிறார். இத்திரைப்படம் அக்டோபர் 15 அன்று வெளியாகவுள்ளது.
இதனைத் தொடர்ந்து, கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் 'தர்மன்' என்ற புதிய படத்திலும் அவர் நடிக்கவுள்ளார்.