சினிமா செய்திகள்

புஷ்பா 2 கூட்டநெரிசல் வழக்கு: காணொளி காட்சி மூலம் ஆஜரான அல்லு அர்ஜூன்

அல்லு அர்ஜுனை காணும் ஆவலில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரையரங்கிற்கு வெளியே திரண்டிருந்தனர்.

நடிகர் அல்லு அர்ஜுன், தற்போது தனது அடுத்த படத்திற்கான படப்பிடிப்புக்காக மும்பையில் உள்ளார். இதையடுத்து, சந்தியா திரையரங்க கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பான நீதிமன்ற நடவடிக்கைகளில் அல்லு அர்ஜூன் காணொளிக் காட்சி மூலம் ஆஜரானார்.

வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இருவர் ஆஜராக தவறியதாலும், அவர்கள் விலக்கு மனுக்களை தாக்கல் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதாலும், நம்பள்ளி குற்றவியல் நீதிமன்றம் விசாரணையை ஜூலை 29-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

இந்த வழக்கு, 2024 டிசம்பர் 04-ஆம் தேதியன்று ஐதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் ' புஷ்பா 2: தி ரூல்' திரைப்படத்தின் முதல் காட்சியின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசல் தொடர்பானது. திரைப்படம் திரையிடப்படுவதற்கு முன்பு அல்லு அர்ஜுனை ஒருமுறை காணும் ஆவலில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரையரங்கிற்கு வெளியே திரண்டிருந்தனர்.

உயிரிழப்பு:

கூட்ட நெரிசலில் சிக்கி ரேவதி (39) உயிரிழந்ததார். மேலும், அவரது மகன் ஸ்ரீ தேஜா படுகாயமடைந்தார். அதே சமயம், இந்த சம்பவம் நடந்தபோது அவரது கணவர் பாஸ்கரும், அவர்களது மற்றொரு குழந்தையும் திரையரங்கில் இருந்தனர். நடிகர் தனது வாகனத்தின் சன்ரூஃப் வழியாக ரசிகர்களை வாழ்த்திய பிறகு கூட்டம் அதிகரித்ததாக ஆய்வாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

நிகழ்ச்சியின் திட்டமிடல் மற்றும் கையாளுதலில் பல குறைபாடுகளை அதிகாரிகள் கண்டறிந்தனர். கூட்டத்தை கட்டுப்படுத்துதல், பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் திரையரங்கு நிர்வாகம், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மற்றும் தனியார் பாதுகாப்பு பணியாளர்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்பில் ஏற்பட்ட குறைபாடுகளை குற்றப்பத்திரிக்கை சுட்டிக்காட்டுகிறது.

இந்த கண்டுபிடிப்புகளின் அடிப்படையில், அல்லு அர்ஜுன், அவரது குழுவினர் மற்றும் திரையரங்க நிர்வாகத்தின் மீது, கொலைக்கு நிகரானதல்லாத கொலை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் காவல்துறை வழக்கு பதிவு செய்தது. இந்த சம்பவம் தொடர்பாக 23 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, 2025 டிசம்பர் 24 அன்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

ஒத்திவைப்பு:

சிக்கட்பள்ளி போலீசார், சந்தியா திரையரங்கின் உரிமையாளர், கூட்டாளிகள், மேலாளர், கீழ்மாடி பொறுப்பாளர் மற்றும் வாயிற்காப்பாளர் ஆகியோரை 1 முதல் 10 வரையிலான குற்றவாளிகளாகவும், அல்லு அர்ஜுனை 11-ஆவது குற்றவாளியாகவும் பட்டியலிட்டுள்ளனர்.

அல்லு அர்ஜுன் உட்பட பல குற்றவாளிகள் ஆஜராகாததால், இந்த வழக்கு முன்னதாக ஜூன் 22 அன்று ஒத்திவைக்கப்பட்டது. அவரது வழக்கறிஞர் ஆஜராவதில் இருந்து விலக்கு கோரியிருந்தார்.

நிதியுதவி:

திரைப்படத்தின் முதல் காட்சிக்கு பெருந்திரளான மக்கள் வருவார்கள் என அதிகாரிகள் எதிர்பார்த்திருந்தபோதிலும், போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரியவில்லை என்று குறிப்பிட்டு, தேசிய மனித உரிமைகள் ஆணையம் (NHRC) பின்னர் அந்த காவல்துறை அறிக்கை குறித்து கவலைகளை எழுப்பியது.

இந்த துயர சம்பவத்தைத் தொடர்ந்து, ரேவதியின் குடும்பத்திற்கு நிதியுதவி அளிப்பதாக அல்லு அர்ஜுன் அறிவித்தார். அவரது தந்தையும் தயாரிப்பாளருமான அல்லு அரவிந்தும், துயரத்தில் மூழ்கிய குடும்பத்திற்கு ஆதரவளிக்க 2 கோடி ரூபாய் வழங்குவதாக உறுதியளித்தார்.