சினிமா செய்திகள்

ஒரே படத்தில் 6 இயக்குநர்களா? பிரதீப் ரங்கநாதனின் புதிய பட அறிவிப்பால் இணையத்தில் வைரலாகும் வீடியோ!

படப்பிடிப்பு மற்றும் இதர விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

'கோமாளி', 'லவ் டுடே', 'டிராகன்' ஆகிய தொடர் வெற்றித் திரைப்படங்களின் மூலம் தமிழ் சினிமாவின் இளம் நட்சத்திரமாக உருவெடுத்துள்ள நடிகர் மற்றும் இயக்குனர் பிரதீப் ரங்கநாதனின் அடுத்த புதிய படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகி உள்ளது.

பிரதீப் ரங்கநாதன்

பிரதீப் ரங்கநாதன் தமிழ் சினிமாவில் மிக வேகமாக வளர்ந்து வரும் ஒரு முக்கிய இயக்குநர், நடிகர், திரைக்கதை எழுத்தாளர் மற்றும் பாடலாசிரியர் ஆவார். இளைய தலைமுறையினரின் ரசனைக்கேற்ப நகைச்சுவை மற்றும் எமோஷனல் கலந்த கதைகளை உருவாக்குவதில் இவர் மிகவும் பிரபலமானவர்.

சமீபத்தில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்த 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' திரைப்படம் வெளியானதைத் தொடர்ந்து, அவரது அடுத்த படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் பெருமளவில் இருந்தது.

சொந்த தயாரிப்பில் களமிறங்கும் பிரதீப்

தற்போது அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில், பிரதீப் ரங்கநாதன் தனது புதிய பிரம்மாண்டமான அடுத்த கட்ட நகர்வை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். பிரதீப் ரங்கநாதனின் சொந்த தயாரிப்பு நிறுவனமான 'PR' (PR Productions) தயாரிப்பில் உருவாகும் முதல் திரைப்படத்தின் அறிவிப்பு ஒரு பிரத்யேக வீடியோவுடன் இன்று வெளியாகியுள்ளது. தற்காலிகமாக 'PRS01' என பெயரிடப்பட்டுள்ள இத்திரைப்படத்திற்கு பிரதீப் ரங்கநாதனே கதையெழுதி தயாரிக்கிறார்.

பிரம்மாண்ட கூட்டணி

இப்படத்தில் மமிதா பைஜூ, அஸ்வத் மாரிமுத்து, ஸ்வாதிகா, அனாமிகா மஹி மற்றும் தெலுங்கு நடிகர் சோந்தினேனி சிவாஜி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர். மேலும் இப்படத்தை 6 திரைப்பட இயக்குநர்கள் இயக்க உள்ளதாக வெளியிடப்பட்டுள்ள வீடியோவில் தெரியவந்துள்ளது. இப்படத்திற்கு சாய்அபயங்கர் இசையமைக்கிறார்.

தற்போது வெளியிடப்பட்டுள்ள வீடியோவை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர். படப்பிடிப்பு மற்றும் இதர விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.