தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ரவி மோகன். கடந்த 2009-ஆம் ஆண்டு ஆர்த்தி என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். இந்த தம்பதிக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். சுமார் 15 ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்த இந்த ஜோடி கடந்த 2024-ஆம் ஆண்டு விவாகரத்து கோரி நீதிமன்றத்தை நாடியது. தற்போது விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இதனிடையே, ரவி மோகன் அவரது தோழியும் பாடகியுமான கெனிஷாவுடன் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இதனால் எழுந்த சர்ச்சைகள், அவற்றை சுட்டிக் காட்டி ஆர்த்தி எழுப்பிய கேள்விகள் பெரும் பேசுபொருளாக மாறியது. இதற்கிடையே, நடிப்பில் கதாநாயகன், வில்லன் கதாபாத்திரங்களில் நடிப்பது மட்டுமில்லாமல் தயாரிப்பு நிறுவனம், இயக்குநர் என சினிமா துறையில் அடுத்தக்கட்டத்தில் அடியெடுத்து வைத்து பணியாற்றி வருகிறார் ரவி மோகன்.
இந்த நிலையில், தற்போது நடிகர் ரவி மோகன், சொத்து வாங்கிய தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. அதாவது ரவி மோகன் தனது தோழி கெனிஷாவுடன் இணைந்து கோவாவில் சுமார் ரூ.40 லட்சம் மதிப்பிலான சொத்தை வாங்கியுள்ளார்.
இதில் என்ன சர்ச்சை என்று தானே கேட்குறீர்கள்? இருக்கு... அதாவது ரவிமோகன் வாங்கிய சொத்து ஆவணத்தில் தன்னை திருமணமாகாதவர் என்று குறிப்பிட்டுள்ளதாக தகவல் வெளியாகி பெரும் கவனத்தை பெற்றுள்ளது. நடிகர் ரவி மோகன், ஆர்த்தி ரவியை சட்டப்பூர்வமாகத் திருமணம் செய்துகொண்டவர் என்பது அனைவரும் அறிந்ததே என்பதால், இந்த தகவல் சமூக வலைத்தளத்தில் ஒரு விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
நடிகர் ரவி மோகன் அவ்வாறு திருமணமாகாதவர் என்று குறிப்பிட்டு இருந்தால் அது தவறு என்று சிலர் கூறிவருகின்றனர். மேலும் சிலர் இதனை ஒரு எழுத்தர் அல்லது நிர்வாக தவறாக கூட இருக்கலாம் என்று ரவி மோகனுக்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர். எது எப்படியோ இதற்கு ரவி மோகன் பதில் சொன்னால் மட்டுமே வெளிச்சம் என்று ரசிகர்கள் ஆதங்கம் கொள்கின்றனர்.