இயக்குனர் மணிரத்னம், விஜய் சேதுபதி மற்றும் சாய் பல்லவி கூட்டணியில் உருவாகவிருக்கும் புதிய திரைப்படத்தின் டிஜிட்டல் உரிமம் குறித்த முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. தற்காலிகமாக 'புரொடக்ஷன் நம்பர் 23' என்று பெயரிடப்பட்டுள்ள இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூலை மாதம் தொடங்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஒரு அழுத்தமான காதல் கதையாக உருவாகவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பாகவே, இதன் ஒட்டுமொத்த OTT உரிமத்தை பிரபல முன்னணி நிறுவனமான Netflix கைப்பற்றியுள்ளது.
இந்த வியாபாரம் சுமார் 20 கோடி ரூபாய்க்கு முடிவடைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மணி ரத்னத்தின் முந்தைய பிரம்மாண்ட படைப்புகளான 'பொன்னியின் செல்வன்' மற்றும் கமல்ஹாசனுடன் அவர் இணைந்துள்ள 'தக் லைஃப்' ஆகிய படங்களின் OTT உரிமத் தொகையோடு ஒப்பிடுகையில் இது சற்றே குறைவான தொகையாகப் பார்க்கப்பட்டாலும்,
படப்பிடிப்பிற்கு முன்பே ஒரு படத்திற்கு இவ்வளவு பெரிய தொகை வியாபாரமாகியிருப்பது சினிமா வட்டாரத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்துடன் இணைந்து லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் இந்தியா டாக்கீஸ் ஆகிய நிறுவனங்கள் இப்படத்தை பெரும் பொருட்செலவில் தயாரிக்கின்றன.
மணி ரத்னத்தின் ஆஸ்தான கூட்டாளியான இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைக்கிறார். ஏற்கனவே மணி ரத்னத்தின் 'செக்கச் சிவந்த வானம்' திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடித்திருந்த நிலையில், தற்போது இந்த புதிய படம் மூலம் இருவரும் மீண்டும் இணைகின்றனர்.
அதேசமயம், நடிகை சாய் பல்லவி இயக்குனர் மணி ரத்னம் மற்றும் விஜய் சேதுபதி ஆகிய இருவருடனும் முதன்முறையாகக் கைகோர்ப்பதால், இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இப்போதே அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.