மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் கடந்த சில தினங்களாக இடைவிடாது பெய்து வரும் கனமழையால் ஒட்டுமொத்த நகரமும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. பல முக்கிய சாலைகள், தாழ்வான பகுதிகள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியுள்ளது. இந்த கோர மழைக்கு இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மழைப்பொழிவு தொடர்ந்து நீடித்து வருவதால், அவசரத் தேவையின்றி பொதுமக்கள் யாரும் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அரசு அதிகாரிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
மும்பையை புரட்டிப் போடும் இந்த மழையினால் சாமானிய மக்கள் மட்டுமின்றி, அங்கு வசிக்கும் பாலிவுட் திரை உலக பிரபலங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
மும்பையில் உள்ள நடிகர் அமிதாப்பச்சனின் இல்லமான ஜல்சாவிற்கு முன்பு மழை வெள்ளம் தேங்கி உள்ளது. வீட்டிற்குள்ளும் மழை வெள்ளம் புகுந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அமிதாப்பச்சன் வீட்டுக்கு முன்பு தேங்கி உள்ள மழை வெள்ள வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.