தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபு நேற்று (ஆகஸ்ட் 9) தனது 51வது பிறந்தநாளைக் கொண்டாடினார்.
51 வயதிலும் அவரது இளமையான தோற்றத்திற்கு அவரின் உணவு முறையே காரணம் மருத்துவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
பேஸ்ட்ரி (கேக் வகை), பர்கர் மற்றும் தயிர் சாதம் ஆகிய மூன்றில் எதைத் தேர்ந்தெடுப்பீர்கள் என ஒரு நேர்காணலில் கேட்கப்பட்டபோது, "நான் இவை எதையும் சாப்பிடுவதில்லை. பால் பொருட்கள் மற்றும் ரொட்டிவகைகளை முற்றிலுமாகத் தவிர்க்கிறேன். பர்கர் பக்கமே போவதில்லை" என மகேஷ் பாபு பதிலளித்திருந்தார்.
அவர் காய்கறிகள் நிறைந்த தாவர அடிப்படையிலான உணவுகளுக்கே முன்னுரிமை அளிக்கிறார்.
அமெரிக்காவில் வசிக்கும் பிரபல இரைப்பை குடல் மருத்துவர் டாக்டர் பழனியப்பன் மாணிக்கம் இது குறித்து விளக்குகையில்,
காய்கறிகளில் உள்ள நார்ச்சத்துக்கள் நமது குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களுக்கு உணவாக அமைகின்றன.
இந்த நல்ல பாக்டீரியாக்கள் உடலில் ஏற்படும் Inflammation (அழற்சி - வீக்கம்)-ஐ குறைக்கின்றன.
உடலில் Inflammation குறையும் போது சருமத்தின் பொலிவும் மேம்பட்டு, முதுமை தோற்றம் தள்ளிப்போகிறது. இதை மருத்துவத்தில் Gut-Skin Axis என அழைக்கின்றனர்.
குடல் ஆரோக்கியத்தை பொறுத்தே சருமப் பொலிவு என கூறப்படும் நிலையில் மருத்துவர் கரண் ராஜன் என்பார் இதற்கு சில ஆலோசனைகளை வழங்குகிறார்.
பெரும்பாலானோர் நாளொன்றுக்கு 15 கிராமிற்கும் குறைவாகவே நார்ச்சத்து உட்கொள்கின்றனர். ஆனால் ஆரோக்கியமான குடல் செயல்பாட்டிற்குத் தினமும் குறைந்தபட்சம் 30 கிராம் நார்ச்சத்து தேவை.
இதற்கு பலவகை காய்கறிகளை உண்ண வேண்டும். கேரட், குடைமிளகாய், தக்காளி போன்ற காய்கறிகளில் உள்ள Carotenoids உடலின் Internal Sun screen செயல்பட்டு சருமத்தின் பளபளப்பை அதிகரிக்கின்றன.
அடுத்ததாக மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். நாள்பட்ட மன அழுத்தம் குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களின் சமநிலையைக் குலைத்து சருமப் பிரச்சினைகளை உருவாக்குகிறது.
சுருக்கமாகக் கூறின், சிறந்த சரும ஆரோக்கியம் என்பது நாம் முகத்தில் தடவும் கிரீம்களில் மட்டும் இல்லை. நம் குடலில் உள்ள பாக்டீரியாக்களுக்கு அளிக்கும் உணவிலேயே அடங்கியுள்ளது என்கிறது மருத்துவ உலகம்.