கொன்றால் பாவம், மாருதிநகர் காவல்நிலையம் போன்ற படங்களை இயக்கி பிரபலமானவர் தயாள் பத்மநாபன்.
இவர் தற்போது, உண்மை சம்பவமான லட்சுமிகாந்தன் கொலை வழக்கை மையமாக கொண்டு அதே பெயரில் படத்தை இயக்கியுள்ளார்.
இதில், வெற்றி, ரங்கராஜ் பாண்டே, பிரிகிடா, லிஸ்ஸி ஆன்டனி, சரவணன், லொள்ளு சபா மாறன், இளவரசு மற்றும் கவிதா பாரதி ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்த படம் தமிழ் சினிமா வரலாற்றில் நடந்த உண்மைச் சம்பவத்தை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பதிவு செய்துள்ளது.
தயாள் பத்மநாபன் இயக்கத்தில் உருவாகியுள்ள லட்சுமிகாந்தன் கொலை வழக்கு திரைப்படத்தை 2எம் சினிமாஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
1944ல் சென்னையில் 'இந்து நேசன்' பத்திரிகையாளர் சி.என். லட்சுமிகாந்தன் படுகொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் அப்போதைய தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களான தியாகராஜ பாகவதர் மற்றும் என்.எஸ். கிருஷ்ணன் ஆகியோர் கைது செய்யப்பட்டு, அப்போது பெரும் பரபரப்பாக இந்த வழக்கு பேசப்பட்டது.
இந்த வழக்கை அடிப்படையாக கொண்டு இப்படம் உருவாகி உள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த ஜூன் 23 அன்று வெளியான இப்படத்தின் டிரெய்லர் கவனம் ஈர்த்தது. மேலும் படம் ஜூலை 10 ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இப்படத்திற்கு சென்சார் வாரியம் “யு/ஏ” தணிக்கை சான்றிதழ் வழங்கியுள்ளது. இதை படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.