சினிமா செய்திகள்

'கிங்ஸ்டன்' படத்தின் தோல்வி: மனம் திறந்த நடிகை திவ்யபாரதி!

"வெற்றிக்கு பின் வாய்ப்புகள் தானாக தேடி வரும் என்று நினைத்தேன்"

'பேச்சுலர்' படத்தின் மூலம் பிரபலமான நடிகை திவ்யபாரதி, தனது முந்தைய தியேட்டர் ரிலீஸான 'கிங்ஸ்டன்' திரைப்படத்தின் பாக்ஸ் ஆபீஸ் தோல்வி குறித்தும், பட வாய்ப்புகளில் ஏற்பட்ட இடைவெளி குறித்தும் மனம் திறந்துள்ளார்.

ஜி.வி. பிரகாஷ் குமார் தயாரித்து நடித்த 25-வது படமான 'கிங்ஸ்டன்', விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இது குறித்து திவ்யபாரதி தனது பேட்டி ஒன்றில்,

"கிங்ஸ்டன் ஒரு நல்ல படமாக உருவாவதற்கான அனைத்து சாத்தியக்கூறுகளும் இருந்தன. ஆனால், இடையில் ஏதோ ஒரு கட்டத்தில் நாங்கள் எதிர்பார்த்தபடி அது அமையாமல் போய்விட்டது" என்று திவ்யபாரதி தெரிவித்துள்ளார். மேலும், 'பேச்சுலர்' படத்தின் வெற்றிக்கு பிறகும் பட வாய்ப்புகள் குறைய தனக்கு சினிமா பின்னணி இல்லாததே காரணம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

"வெற்றிக்கு பின் வாய்ப்புகள் தானாக தேடி வரும் என்று நினைத்தேன்; அது ஓவர் கான்ஃபிடன்ஸ் இல்லை, சினிமா அப்படித்தான் இயங்கும் என நம்பினேன். ஆனால், நாமாகத் தான் வாய்ப்புகளைத் தேடி நெட்வொர்க்கிங் செய்ய வேண்டும் என்பதைத் தாமதமாகவே புரிந்து கொண்டேன்" என கூறியுள்ளார்.

சமீபத்தில் ஜியோஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியான 'லிங்கம்' என்ற வெப் சீரிஸில் கதிர் ஜோடியாக திவ்யபாரதி நடித்துள்ளார்.

8 எபிசோடுகளைக் கொண்ட இந்தத் தொடர், 'விலங்கு' சீரிஸ் புகழ் பிரசாந்த் பாண்டியராஜ் வழங்க, லட்சுமி சரவணக்குமார் இயக்கத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.