கடன் பிரச்சனையில் சிக்கித் தவிக்கும் ஆதர்ஷ் மதிகாந்துக்கு, கோவை அருகே வசிக்கும் தனது தாத்தா சொத்துக்களை பேரன், பேத்திகளுக்கு எழுதிவைக்க விரும்புவதாக தகவல் வருகிறது.
இதையடுத்து தனது மனைவி மற்றும் தங்கையுடன் அந்த கிராமத்திற்கு செல்லும் அவர், அங்கு எதிர்பாராத பல அமானுஷ்ய சம்பவங்களை சந்திக்கிறார்.
மேலும், தன்னை அங்கு வரவழைத்த நபரும், தனது தாத்தாவும் பல வருடங்களுக்கு முன்பே இறந்துவிட்டனர் என்ற அதிர்ச்சி உண்மையும் தெரியவருகிறது.
இறுதியில் தாத்தா சொத்து என்ன ஆனது? ஆதர்ஷ் மதிகாந்த் சந்தித்த அமானுஷ்ய சம்பவங்கள் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தில் நாயகனாக நடித்திருக்கும் ஆதர்ஷ் மதிகாந்த், கடன் சுமையால் தவிக்கும் இளைஞராகவும், அமானுஷ்ய சக்தியின் தாக்கத்தில் சிக்கிக் கொள்ளும் மனிதராகவும் சிறப்பாக நடித்திருக்கிறார். பயம், குழப்பம், பதற்றம் என பல உணர்வுகளை இயல்பாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
ஜோவிதா லிவிங்ஸ்டன் குடும்ப பெண்ணாக கதைக்கு பொருத்தமான தேர்வாக இருக்கிறார். அருவி மதன், சோனியா அகர்வால் ஆகியோர் குறைவான காட்சிகளில் வந்தாலும் மனதில் பதிகிறார்கள். அமுதவாணன், ரபிக் பாட்ஷா, கே.பாக்யராஜ், லிவிங்ஸ்டன் உள்ளிட்டோரும் கதைக்கு தேவையான பங்களிப்பை வழங்கியிருக்கிறார்கள்.
ஒரு வீட்டை மையமாக வைத்து நகரும் கதையை சுவாரஸ்யமான திரைக்கதையுடன் சொல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குநர் கே.எஸ். கிஷான். திகில், அமானுஷ்யம் மற்றும் குடும்ப பின்னணியில் மறைந்து கிடக்கும் மர்மங்களை சொல்லி இருக்கிறார். சில இடங்களில் கதை சொல்லலில் குழப்பங்கள் இருந்தாலும், திகில் காட்சிகள் மற்றும் தொழில்நுட்ப தரம் அந்த குறைகளை ஓரளவு மறக்கடிக்கின்றன.
ஒளிப்பதிவாளர் சங்கீத் மணிகோபால், திகில் காட்சிகளை அச்சமூட்டும் வகையில் காட்சிப்படுத்தியிருக்கிறார்.
விக்னேஷ் ராஜாவின் பின்னணி இசை பல காட்சிகளில் பயத்தை அதிகரிக்கிறது.