'ஸ்டார்' திரைப்படத்தின் மூலம் பிரபலமான நடிகை பிரீத்தி முகுந்தன், அர்ஜுன் மற்றும் அபிராமி நடிப்பில் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் 'பிளாஸ்ட்' திரைப்படத்தில் நடித்தது குறித்து மனம் திறந்துள்ளார்.
சுபாஷ் கே ராஜ் இயக்குநராக அறிமுகமான இத்திரைப்படத்தில் கராத்தே சண்டை குடும்பத்தைச் சேர்ந்த 'நிலா' என்ற சவாலான ஆக்ஷன் கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ளார்.
இதுகுறித்து அவர் பேசுகையில், இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டது தான் எடுத்த ஒரு வழக்கத்திற்கு மாறான முடிவு என்றும், தன் இடத்தில் வேறு எந்த கதாநாயகிகள் இருந்திருந்தாலும் இப்படிப்பட்ட ஒரு அதிரடி ஆக்ஷன் கதாபாத்திரத்தில் நடிக்க நிச்சயம் பயந்திருப்பார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
தனக்கு எப்போதும் திரையில் அதிரடியான ஆக்ஷன் வேடங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்ததாகவும், படம் வெளியான பிறகு மக்கள் கொடுத்த ஆதரவு தனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் நெகிழ்ச்சியையும் தந்துள்ளதாக அவர் கூறியுள்ளார். இப்படத்தில் அவரது ஸ்டண்ட் காட்சிகளைப் பார்த்த 'ஆக்ஷன் கிங்' அர்ஜுன், பிரீத்தி ஸ்டண்ட்களில் தன்னைவிட வேகமாக முந்திவிடுவார் போல் இருக்கிறது எனப் பாராட்டியுள்ளார்.
பிரீத்தி முகுந்தன் அடுத்ததாக அதர்வா மற்றும் கயாடு லோஹருடன் இணைந்து நடித்துள்ள 'இதயம் முரளி' திரைப்படம் வரும் ஜூலை 10 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. 'பிளாஸ்ட்' படத்தில் பார்த்த ரஃப்பான கதாபாத்திரத்திற்கு முற்றிலும் மாறாக, இதில் மிகவும் அமைதியான, அழகான கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ளார்.
இதுதவிர, தமிழில் ஹரிஷ் கல்யாணுடன் 'தசமகன்' திரைப்படத்திலும், தெலுங்கில் ரோஷன் மேகாவுடன் 'ஏமோ ஏமோ இதி' என்ற படத்திலும் நடித்து வரும் அவர், 'நாக்சில்லா' என்ற படத்தின் மூலம் இந்தியிலும் அறிமுகமாகவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.