பிரபாஸ் 
சினிமா செய்திகள்

பாகுபலி 3 குறித்து வெளியான புது அப்டேட்

பாகுபலியின் பாரம்பரியம் தொடரும் என்பதுடன் அந்த வீடியோ கிளிப் நிறைவடைகிறது.

‘பாகுபலி 3’ படத்தின் பூஜை நாளையோ அல்லது நாளை மறுநாளோ நடைபெறும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

பாகுபலி

எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில் 2015-இல் வெளியான அதிபிரம்மாண்ட வரலாற்று புனைவு திரைப்படம் ‘பாகுபலி’.

பாகுபலியாக பிரபாஸ், பல்வால் தேவனாக ராணா டகுபதி, தேவசேனாவாக அனுஷ்கா ஷெட்டி, அவந்திகாவாக தமன்னா, சிவகாமி தேவியாக ரம்யா கிருஷ்ணன், கட்டப்பாவாக சத்யராஜ் என படத்தில் நடித்த ஒவ்வொருவரின் கதாபாத்திரமும் மறக்க முடியாதவையாக மாறின.

தமிழ், தெலுங்கு, இந்தி என பான் இந்தியா படமாக வெளியாகி சுமார் ரூ.2500 கோடி வசூலித்து சாதனை படைத்தது.

தொடர்ந்து 2017 இல் இதன் இரண்டாம் பாகம் வெளியாகி முதல் பாகம் போலவே அதிரிபுதிரி ஹிட் ஆனது.

இவ்விரு பாகுபலி பாகங்களும் உலக அரங்கில் இந்திய சினிமாவின் பிரமாண்டத்திற்கு எடுத்துக்காட்டாக அமைந்தன. தொடர்ந்து 2025 இல் முதல் இரண்டு பாகங்களையும் ஒன்றிணைத்து பாகுபலி - தி எபிக், திரையரங்குகளில் வெளியாகியது.

பாகுபலி - தி டார்ச்பியரர்

பாகுபலி முதல் மற்றும் இரண்டாம் பாகங்களின் படப்பிடிப்பு சுமார் 5 ஆண்டுகள் வரை நடந்தன.

படப்பிடிப்புபின் போதான அனுபவங்கள், கலைஞர்கள் பெற்ற படிப்பினைகள், படமாக்கலில் இருந்த சவால்கள் குறித்து படக்குழுவினர் நீண்ட ஆண்டுகளுக்கு பின் தங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொள்ளும் வகையிலான ஆவணத் தொடர் பாகுபலி - தி டார்ச்பியரர் பிரபல ஓடிடி தளமான நெட்பிளிக்ஸ்-இல் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றது.

இந்த தொடரில் பிரபாஸ், அனுஷ்கா ஷெட்டி, ராணா டகுபதி ஒன்றாக அமர்ந்து பேசிய ஒரு கிளிப் வைரலானது. அதில் ராணா, "உலகம் இன்னும் அதற்கு தயாராகவில்லை. ஆனால் பாகுபலி....." என சஸ்பென்ஸ் வைக்க, பிரபாஸ் சிரித்தபடி தனது கையின் 3 விரல்களை நீட்டி கையை உயர்த்த அவரை தடுத்து அனுஷ்காவும், ராணாவும் சிரிக்கின்றனர். பாகுபலியின் பாரம்பரியம் தொடரும் என்பதுடன் அந்த வீடியோ கிளிப் நிறைவடைகிறது.

இதன்மூலம் பாகுபலியின் அடுத்த பாகம் உருவாக வாய்ப்பிருப்பதாக நெட்டிசன்கள் பேசத் தொடங்கினர்.

பாகுபலி 3

இந்த நிலையில், ‘பாகுபலி 3’ படத்தின் பூஜை நாளையோ அல்லது நாளை மறுநாளோ நடைபெறும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இருப்பினும் பட தயாரிப்பு நிறுவனம் மற்றும் இயக்குநர் ராஜமௌலி தரப்பில் இருந்து இதுவரை உறுதியான அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.