சென்னையின் குடிசைப்பகுதியில் வசிக்கும் தடகள வீரரான நாயகன் கே.ஜெ.ஆர், தேசிய அளவிலான போட்டியில் சாம்பியன் பட்டம் வென்று காமன்வெல்த் போட்டிக்கு தகுதி பெறுகிறார். ஆனால், விளையாட்டுத்துறையில் நடக்கும் அரசியல் மற்றும் மோசடிகளால் அவருக்கான வாய்ப்பு மறுக்கப்படுகிறது. பல இடங்களில் போராடியும் நீதி கிடைக்காததால், நீதிமன்றத்தில் தானே வாதாடி தனக்கான அங்கீகாரத்தை பெற முயற்சிக்கிறார்.
இறுதியில் அந்த போராட்டத்தில் அவர் வெற்றி பெற்றாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கும் கே.ஜெ.ஆர், தடகள வீரருக்கான உடல்மாற்றத்தை சிறப்பாக மேற்கொண்டிருக்கிறார். அதற்காக அவர் எடுத்த உழைப்பு திரையில் தெரிகிறது. ஆனால், நடிப்பில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம் என்ற எண்ணம் ஏற்படுகிறது. பல காட்சிகளில் ஒரே மாதிரியான முகபாவனைகள் அவரது கதாபாத்திரத்தின் தாக்கத்தை குறைக்கிறது.
வசுந்தரா, இசபெல்லா, விஜி வெங்கடேஷ், மன்சூர் அலிகான், மோகன் ராமன் உள்ளிட்ட மற்ற நடிகர்கள் தங்களது கதாபாத்திரங்களுக்கு தேவையான பங்களிப்பை வழங்கியிருக்கிறார்கள்.
எழுதி இயக்கியிருக்கும் தென்பாதியான், விளையாட்டுத்துறையில் தகுதி இருந்தும் அங்கீகாரம் கிடைக்காமல் தவிக்கும் வீரர்களின் வலியை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.
கிரிக்கெட்டை தவிர மற்ற விளையாட்டுகளுக்கு கிடைக்கும் புறக்கணிப்பையும், அதிகாரிகளின் அலட்சியத்தையும் கேள்விக்குள்ளாக்கியிருப்பது பாராட்டுக்குரியது.
அதே நேரத்தில், நீதிமன்ற காட்சிகள் பல இடங்களில் சினிமாத்தனமாக இருப்பதால், படத்தின் எதார்த்தம் சற்று குறைகிறது. ஒரு விளையாட்டு வீரரின் வெற்றியை மட்டுமல்ல, அவருக்கான அங்கீகாரத்திற்கான போராட்டத்தையும் பேசும் படமாக கவனம் ஈர்க்கிறது.
ஏ.விஸ்வநாத்தின் ஒளிப்பதிவு எதார்த்தமான லொக்கேஷன்களை அழகாக பதிவு செய்திருக்கிறது.
ஜிப்ரானின் பின்னணி இசை பல உணர்வுப்பூர்வமான காட்சிகளுக்கு கூடுதல் பலம் சேர்க்கிறது.