சினிமா செய்திகள்

சென்னையில் தேர்தல் அதிகாரிகளின் சோதனையில் சிக்கிய 'AK 47’ துப்பாக்கிகள் - கடைசில் நடந்த ட்விஸ்ட்

அசோக் நகர், 2-வது அவென்யூ பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

மாலை மலர்

சட்டசபை தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்களை அரசியல் கட்சியினர் கொடுப்பதை தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். வாகன சோதனையின் போது உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்படும் பணம் மற்றும் நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் சென்னை, அசோக் நகர், 2-வது அவென்யூ பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே வந்த மினி வேனை நிறுத்தி சோதனையிட்டனர்.

அதில் ஏ.கே. 47 வகை உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட துப்பாக்கிகள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அந்த துப்பாக்கிகளை ஆய்வு செய்த போது அவை டம்மிதுப்பாக்கிகள் என்பது தெரிந்தது. இதுபற்றி வேன் டிரைவர் மகேந்திரனிடம் விசாரணை நடத்தியபோது இந்த டம்மி துப்பாக்கிகள் அனைத்தும் பிரபல சினிமா இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கதாநாயகனாக நடித்து வரும் “டிசி” என்கிற புதிய படத்தின் படப்பிடிப்பிற்காக பயன்படுத்தியது என்பது தெரிந்தது.

சினிமா சூட்டிங் முடிந்ததும் அந்த துப்பாக்கிகளை வடபழனியில் உள்ள கடையில் ஒப்படைக்க எடுத்து செல்வதாக தெரிவித்தனர். இதையடுத்து டம்மி துப்பாக்கிகளுக்கு உண்டான லைசன்ஸை சரிபார்த்த பின்னர் வேனை அதிகாரிகள் அனுப்பி வைத்தனர். தேர்தல் அதிகாரிகள் சோதனையில் ஏ.கே.47 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் பரவியதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.