search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குருப்பெயர்ச்சி"

    • குருபகவான் தரும் யோகங்களில் குறிப்பிடத்தக்க யோகங்கள் ஐந்து.
    • குருவின் சந்நிதியில் நேரில் நின்று வழிபட்டால் சிறப்பும், செல்வாக்கும் வந்து சேரும்.

    குருபகவான் தரும் யோகங்களில் குறிப்பிடத்தக்க யோகங்கள் ஐந்தாகும். 1) கஜகேசரி யோகம் 2) குருச்சந்திரயோகம் 3) குருமங்களயோகம் 4) ஹம்சயோகம் 5) சகடயோகம். அவற்றை பற்றிய விளக்கம்:

    கஜகேசரி யோகம்:

    குரு, சந்திரனுக்கு கேந்திரத்தில் அதாவது 4, 7, 10 ஆகிய இடங்களில் இருந்தால் ``கஜகேசரி யோகம்'' உண்டாகிறது. இந்த யோகத்தைப் பெற்றவர்கள் செல்வம், செல்வாக்கு, வீடு, வாகனம், உயர்ந்த பதவி போன்றவற்றைப் பெற்றவராக விளங்குவர்.

    குருச்சந்திரயோகம்:

    சந்திரனுக்கு குரு 1, 5, 9 ஆகிய இடங்களில் காணப்பட்டால் `குருச்சந்திரயோகம்' உருவாகிறது. இந்த யோகத்தைப் பெற்றவர்கள் புகழ்மிக்கவராகவும், நல்ல அந்தஸ்து படைத்தவர்களாகவும் இருப்பர்.

    குரு மங்களயோகம்:

    குருவுக்கு கேந்திரத்தில் செவ்வாய் இருந்தால் `குரு மங்கள யோகம்' ஏற்படும். இந்த யோகத்தை பெற்றவர்கள் வீடு, இடம், வாகனம் போன்றவற்றை அதிகம் வாங்கி மகிழும் வாய்ப்புண்டு.

    ஹம்சயோகம்:

    சந்திரனுக்கு கேந்திரத்தில் குரு உச்சம் பெற்றால் இந்த யோகம் உண்டாகிறது. நல்ல உடலமைப்பும், ஒழுக்கமான வாழ்க்கையும் உள்ளவர்களாக இந்த `ஹம்ச' யோகத்தில் பிறந்தவர்கள் திகழ்வார்கள்.

    சகடயோகம்:

    குருவுக்கு சந்திரன் 6, 8, 12 ஆகிய இடங்களில் இருந்தால், ``சகடயோகம்'' ஆகும். வண்டிச்சக்கரம் போல் இவர்களது வாழ்க்கையில் இன்பமும், துன்பமும் கலந்தேயிருக்கும். பொதுவாக, யோகம் தரும் குருவைப் போற்றிக் கொண்டாடினால், பொன்னான எதிர்காலம் அமையும். குருவை நாம் கோவிலுக்குச் சென்று வழிபடும் பொழுது, அதன் பார்வை நம்மீது பதியும் விதத்தில் நேராய் நின்று வழிபட வேண்டும்.

    சனியை சாய்வாய் நின்று கும்பிடு! குருவை நேராய் நின்று கும்பிடு என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது. அந்த அடிப்படையில் குருவின் சந்நிதியில் நேரில் நின்று வழிபட்டால் சீரும், சிறப்பும், செல்வாக்கும் நமக்கு வந்து சேரும்.

    குருவின் சந்நிதியில் நாம் பாட வேண்டிய பாடல்:

    "வானவர்க் கரசே! வளம் தரும் குருவே!

    காணா இன்பம் காண வைப்பவனே!

    பொன்னிற முல்லையும் புஷ்ப ராகமும்!

    உந்தனுக்களித்தால் உள்ளம் மகிழ்வாய்!

    சுண்டல் தானியமும் சொர்ண அபிஷேகமும்!

    கொண்டுனை வழிபடக் குறைகளைத் தீர்ப்பாய்!

    தலைமைப் பதவியும் தனித்தோர் புகழும்!

    நிலையாய் தந்திட நேரினில் வருக!''

    "நாளைய பொழுதை நற்பொழுதாக்குவாய்!

    இல்லற சுகத்தினை எந்தனுக் களிப்பாய்!

    உள்ளத்தில் அமைதி உறைத்திடச் செய்வாய்!

    செல்வ செழிப்பும் சேர்ந்திட வைப்பாய்!

    வல்லவன் குருவே! வணங்கினோம் அருள்வாய்!

    என்று மனமுருகி பாடுங்கள். பண மழையில் நனையலாம். "பார் போற்ற வாழலாம்''.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 2-ல் குரு இருக்கப் பெற்றவர்கள் பேச்சுத்திறமை பெற்றிருப்பார்கள்.
    • லக்னத்தில் உள்ள வியாழன் ஜாதகருக்கு நல்ல ஒழுக்கத்தைத் தருவார்.

    வியாழன் லக்னத்தில் இருக்கப் பெற்ற ஜாதகர் சிறந்த கல்விமான் ஆவார். தோற்றப் பொலிவு பெற்றிருப்பார்.

    லக்னத்தில் வியாழன் இருக்கப் பெற்ற ஜாதகர் பயம் இல்லாதவராகவும், முன்னேறும் திறமை உள்ளவராகவும் விளங்குவார்.

    லக்னத்தில் உள்ள வியாழன் ஜாதகருக்கு நல்ல ஒழுக்கத்தைத் தருவார். செல்வத்தை வழங்குவார்.

    2-ல் குரு இருக்கப் பெற்றவர்கள் பேச்சுத்திறமை பெற்றிருப்பார்கள்.

    2-ல் குரு வாழ்க்கையில் நல்ல உணவு மற்றும் வசதிகள் எல்லாம் ஜாதகருக்கு உண்டாகச் செய்வார்.

    2-ல் உள்ள குரு சில நேரங்களில் சிலருக்காகத் தியாகம் செய்யும் மனப்பான்மையை வழங்குவார்.

    குரு தனுசிலோ மீனத்திலோ இருக்கப்பெற்று அது, 2-ஆம் இடமாக அமையுமானால், ஜாதகர் வியாபாரத்தில் விற்பன்னராவார்.

    தனுசு, மீனம் தவிர வேறு இடங்கள் 2-ஆம் இடமாகி, அங்கே குரு இருக்கப் பெற்றவர்கள், குடும்ப வாழ்வில் சில தொல்லைகளை அனுபவிக்க நேரும்.

    3-ஆம் இடத்தில் உள்ள ஜாதகருக்கு உலோப குணத்தை வழங்குவார். பக்தி மார்க்கத்தில் ஈடுபாடு ஏற்படும்.

    3-ஆம் இடத்தில் உள்ள வியாழன், ஜாதகரை பெண்களிடம் பிரியம் உள்ளவராக உருவாக்கி வைப்பார்.

    3-ஆம் இடத்தில் உள்ள வியாழன் ஜாதகரை ஒரு நூலாசிரியராக ஆக்கி வைப்பார்.

    3-ல் உள்ள குருவால் ஜாதகர் சகோதரரால் நலம் பெறவும் சகோதரருக்கு நலம் புரியவும் சந்தர்ப்பங்கள் உண்டாகும்.

    3-ல் உள்ள வியாழன் ஜாதகரை உயர்ந்த நிலைக்கு உரியவராகச் செய்வதற்கு இடமிராது.

    3-ல் உள்ள வியாழ னால் ஜாதகருக்கு ஜீரண சக்தி திருப்திகரமாக அமையாது.

    4-ல் உள்ள குரு சுகமான வாழ்க்கையைத் தருவார்.

    மக்கள் நலம், தாய் நலம், நண்பர்கள் நலம், பணியாட்கள் நலம், குடும்ப நலம் இவைகள் எல்லாம் ஜாதகருக்கு 4-ஆம் இடத்தில் உள்ள குருவால் உண்டாகும்.

    விவசாயத்தின் மூலம் தானியங்களைச் சேர்த்து பொருள் திரட்டக்கூடிய வாய்ப்பு 4-ஆம் இடத்து வியாழன் ஜாதகருக்கு உண்டாக்குவார்.

    4-ல் உள்ள குரு ஜாதகரை உன்னதமானவராக உருவாக்குவார். ஆனால், பகைவர்களால் தொல்லைகளை விளைவிப்பார்.

    4-ல் உள்ள குரு பலம் பெற்றிருக்கும் போது ஜாதகருக்கு மதிப்பும், செல்வமும் உயரும்.

    4-ல் உள்ள குரு புத்திர பாக்கியம் தாமதமாக உண்டாகச் செய்வார்.

    வியாழன் 5-ஆம் இடத்தில் இருந்தால் ஜாதகர் புத்திசாலியாக இருப்பார். வாழ்க்கையில் உயர்ந்த பதவி அமையும்.

    5-ஆம் இடத்தில் உள்ள குரு புத்திகாரனாக இருப்பதனால் புத்திரப் பாக்கியக் குறைவு ஏற்படும்.

    5-ல் உள்ள குரு சுபக்கிரகங்களோடு சேராமல் பாபக்கிரகங்களால் பார்க்கப்பட்டிருந்தால் புத்திர பாவத்தைப் ெபாருத்த வகையில் சங்கடம் உண்டாகும்.

    5-ல் உள்ள குரு பலமுள்ளவராகி, சுபக்கிரக சேர்க்கை பெற்றிருந்தால், மக்கள் பாக்கியம் உண்டாகும்.

    5-ல் உள்ள குரு, பொதுவாக வயிற்றுத் தொல்லையைத் தரக்கூடும்.

    6-ஆம் இடத்தில் உள்ள குரு, பகைவரை வெற்றி கொள்ளக்கூடிய பராக்கிரமத்தை உண்டு பண்ணுவார்.

    6-ஆம் இடத்தில் உள்ள குரு உடல் பலமோ, சக்தியோ ஜாதகருக்கு முழுமையாக உண்டாகாதவாறு செய்வார். அஜீரணக் கோளாறு ஏற்படவும் செய்வார்.

    6-ல் உள்ள குரு மனைவியின் மூலமாக சிறப்பு உண்டு பண்ணுவார்.

    6-ஆம் இடத்தில் உள்ள வியாழன் வக்ர கதியை அடைந்திருந்தால், ஜாதகருக்கு பகைவர்களால் தொல்லை ஏற்படலாம்.

    7-ல் உள்ள குரு ஜாதகரை, அவரது தந்தையைக் காட்டிலும் சிறப்பான நிலையில் உயர்த்தி வைப்பார்.

    7-ல் உள்ள வியாழன் காரணமாக ஜாதகருக்கு நல்ல மனைவி அமைவாள்.

    ஜாதகர் பெரிய செல்வந்தர் ஆவதற்கு 7-ஆம் வீட்டு வியாழனால் வாய்ப்பு உண்டாகும். மேலும் ஜாதகர் அவரது தந்தையைக்

    காட்டிலும் பெருந்தன்மை மிகுந்த–வராக விளங்கச் சந்தர்ப்பம் உண்டு.

    7-ல் உள்ள குரு, ஜாதகரை மதியூகம் மிக்கவராகவும், முக்கியமான பதவியை வகிக்கச் செய்கிறவராகவும் ஆக்குவார்.

    7-ஆம் இடத்து குருவின் காரண–மாக அந்த ஜாதகர் பெரிய கவிஞனாக முடியும். புகழ் பெறவும் முடியும்.

    8-ல் உள்ள குரு, ஜாதக–ருக்கு உத்தியோகம் பார்ப்பதன் மூலம் சம்பாத்தியத்தை உண்டு பண்ணுவார்.

    புனித தலங்களுக்கு சென்று இறைவனை வழிப்படக்கூடிய வாய்ப்பு உண்டு பண்ணக்கூடியவர், 8-ஆம் இடத்து வியாழனாவார். ஜோதிடம், குறி சொல்லுதல் ஆகியவற்றில் ஜாதகருக்கு நிபுணத்துவம் உண்டாகும்.

    8-ம் இடத்து வியாழன் காரணமாக ஜாதகருக்கு பொருளாதார நிலையில் முழுமையான சுபிட்சம் இராது. ஆனால், ஆயுள் தீர்க்கமாக இருக்கும்.

    8-ல் உள்ள குரு நண்பர்களால் ஜாதகருக்கு பொருள் இழப்பு உண்டு பண்ணுவார். வியாதியினால் அல்லல் படவும் நேரும்.

    9-ல் உள்ள வியாழன் ஜாதகரை புனித கருமங்கள் செய்ய வைப்பார். உயர்ந்த பதவியை உண்டாக்கித் தருவார்.

    9-ஆம் இடத்தில் உள்ள வியாழன் மிக்க பலம் பெற்றிருந்தால் அந்த ஜாதகர் மந்திரியாகவோ, கட்சித் தலைவராகவோ, பிரகாசிப்பதற்கு வாய்ப்பு ஏற்படும்.

    9-ல் உள்ள குரு ஜாதகருக்கு தெய்வ பக்தியையும், வேத விற்பன்னர்களைப் போற்றுகின்ற பண்பையும் வழங்குவார்.

    10-ல் உள்ள வியாழன் ஒருவரை குபேரனாக்குவார். அரசாங்க மதிப்பையும் வருமானத்தையும் பெற வைப்பார்.

    10-ல் உள்ள குரு, நேர்வழியில் நடக்கக்கூடிய தன்மையை ஜாதகருக்கு வழங்குவார். இந்த ஜாதகர் பெற்றோரை போற்றி நடப்பவர் ஆவார்.

    11-ம் இடத்தில் உள்ள வியாழன், ஜாதகருக்கு பல துறைகளிலும் செல்வத்தைத் திரட்டித் தருவார்.

    11-ம் இடத்தில் உள்ள வியாழன் குறைந்த அளவில் மக்கட்செல்வத்தை வழங்குவார்.

    11-ம் இடத்தில் உள்ள குரு தனித்திருந்தால் பண வருவாயை சுருக்கி விடுவார்.

    12-ல் உள்ள வியாழன் பாச பந்தங்களில் இருந்து ஜாதகரை ஒதுக்கி வைப்பார். பொதுமக்களின் விரோதம் ஜாதகருக்கு ஏற்படும்.

    12-ல் உள்ள குருவினால் ஜாதகருக்குப் பேச்சு வன்மை குறைந்து விடும். ஒழுக்கத்தில் குறைபாடு ஏற்படும். அடிமைப் பணி செய்யக்கூடிய சூழ்நிலை உருவாகும்.

    12-ம் இடத்தில் உள்ள குரு ஜாதகருக்கு அடிக்கடி பயணங்களை உண்டு பண்ணுவார்.

    12-ம் இடம் மீனமாகவோ, தனுசாகவோ ஆகுமானால் ஜாதகர் பக்திமானாகவும், தர்மவானாகவும் விளங்கவும் செல்வத்தைக் குவிக்கவும் வாய்ப்பு ஏற்படும்.

    • பட்டமங்கலத்தில் அஷ்டசித்தி தட்சிணாமூர்த்தி கோவில் உள்ளது.
    • ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    திருப்பத்தூர்:

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள பட்டமங்கலத்தில் அஷ்டசித்தி தட்சிணாமூர்த்தி கோவில் உள்ளது. வியாழக்கிழமை அன்று குருபகவானுக்கு உகந்த நாளாக இருப்பதால் இந்த கோவிலில் வாரந்தோறும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரும் பக்தர்கள், கொண்டைக்கடலை மாலை அணிவித்து விளக்கேற்றி வழிபடுவது வழக்கம். மேலும் இங்கு ஆண்டுதோறும் குருப்பெயர்ச்சி விழாவும் சிறப்பாக நடைபெறும்.

    இந்த ஆண்டுக்கான குருப்பெயர்ச்சி கடந்த மாதம் 27-ந் தேதி சிறப்பு ஹோமத்துடன் தொடங்கியது. குருப்பெயர்ச்சி விழாவையொட்டி குருபகவான், மேஷ ராசியில் இருந்து சுக்ரன் ராசியான ரிஷப ராசிக்கு நேற்று மாலை 5.11 மணிக்கு மாறினார்.

    முன்னதாக அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு குருபகவானுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் வெள்ளி அங்கியில் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டது. மூலவர் முன்பு உள்ள பகுதியில் உற்சவர் கார்த்திகை பெண்களுடன் சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்தார்.

    பின்னர் நேற்று மாலை குருபகவான் ரிஷப ராசிக்கு மாறும்போது, மூலவர் மற்றும் உற்சவருக்கும் கோவில் மேல் பகுதியில் உள்ள கோபுரங்களுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இந்த விழாவில் மதுரை, தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • பரிகார மகா யாக பூஜை நடந்தது.
    • குருபகவானுக்கு திருமஞ்சனம், சிறப்பு அபிஷேகம் நடந்தது.

    சோழவந்தான்:

    மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே குருவித்துறை கிராமம் உள்ளது. இங்கு பிரசித்தி பெற்ற சித்திர ரத வல்லபபெருமாள் கோவில் அமைந்து உள்ளது. இந்த கோவிலில் நவகிரகங்களில் ஒருவரான குரு பகவானுக்கு தனி சன்னதி உள்ளது.

    இந்த சன்னதியில் குருபகவான் பெருமாளை நோக்கி தவக்கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். அருகில் சக்கரத்தாழ்வாரும் காட்சி தருகிறார்.

    இதைத்தொடர்ந்து குருவித்துறை குருபகவான் கோவிலில் குருப்பெயர்ச்சி விழா கடந்த 29-ந்தேதி லட்சார்ச்சனையுடன் தொடங்கியது. நேற்று முன்தினமும், நேற்றும் லட்சார்ச்சனை நடந்தது.

    நேற்று பகல் 2 மணி அளவில் பரிகார மகா யாக பூஜை நடந்தது. 10-க்கும் மேற்பட்ட அர்ச்சகர்கள் வேத மந்திரங்கள் முழங்க யாக பூஜை நடத்தினர். பின்னர் மகா பூர்ணாகுதி நடந்து அர்ச்சகர்கள் புனித தீர்த்தக்குடங்களை எடுத்து கொண்டு கோவிலை வலம் வந்தனர்.

    அதன்பிறகு நேற்று மாலை 5.21 மணிக்கு மேஷம் ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு குருபகவான் இடப்பெயர்ச்சி ஆனதையொட்டி குருபகவானுக்கு திருமஞ்சனம், சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன.

     அப்போது அங்கு திரண்டிருந்த ஏராளமான பக்தர்கள் குருபகவானை வழிபட்டனர். பரிகார ராசிதாரர்கள் பரிகார பூஜை செய்து வழிபட்டனர்.

    பிரளயநாதசுவாமி

    சோழவந்தானில் உள்ள பிரளயநாத சுவாமி கோவிலிலும் நேற்று மாலை பரிகார யாகம் நடந்தது. இதைத்தொடர்ந்து புனித நீர் குடங்களை எடுத்து கோவிலை வலம் வந்தனர். குருபகவானுக்கு சிறப்பு அபிஷேகம், அர்ச்சனை, பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு குரு பகவானை தரிசித்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வாழ்வில் மாற்றத்தை தரும் முக்கிய பகவானாக குரு பகவான் உள்ளார்.
    • குரு பெயர்ச்சி வரும் மே 1ம் தேதி நடக்கிறது.

    ஜோதிடத்தை பொறுத்தவரையில் ஒருவரின் வாழ்வில் மாற்றத்தை தரும் முக்கிய பகவானாக குரு பகவான் உள்ளார். குரு பகவானின் பார்வை பட்டால் செல்வ ரீதியாகவும், செல்வாக்கு ரீதியாகவும் வாழ்வில் மாற்றம் ஏற்படும் என்பது பக்தர்களின் நம்பிக்கை ஆகும்.

    இதன் காரணமாகவே, குரு பெயர்ச்சி அன்று மக்கள் கோவில்களில் தட்சிணாமூர்த்தியை வழிபட குவிந்து வருகின்றனர்.

    நடப்பாண்டிற்கான குரு பெயர்ச்சி வரும் மே 1-ந் தேதி நடக்கிறது. இதனால் தான் ஜோதிடத்தில் குரு பார்க்க கோடி நன்மை என்று கூறப்படுகிறது. இதற்கு பின்னால் உள்ள கதை என்னவென்று பார்க்கலாம்?

    குருவிடம் ஜோதிடம் கற்ற சந்திரன்:

    ஜோதிட சாஸ்திரத்தின் குருவான பிரகஸ்பதியிடம் சந்திர பகவான் தெய்வீக தன்மைகள், சாஸ்திரங்கள் பற்றி கற்றுக்கொள்வதற்காக மாணவனாக சேர்ந்துள்ளார். குரு பகவானும் தனக்கு தெரிந்த அனைத்து ஜோதிட கலைகளையும் சந்திரனுக்கு கற்றுக்கொடுத்துள்ளார்.

    தனது குருவான குரு பகவானிடம் அனைத்து சாஸ்திரங்களையும் கற்றுக்கொண்ட சந்திரனுக்கு தான் என்ற ஆணவம் எட்டிப்பார்க்கத் தொடங்கியது. இதையறிந்த குரு பகவான் அவரது ஆவணத்தை அடக்க முடிவு செய்தார்.

    இதனால், பூமியில் புதியதாக பிறந்த குழந்தைக்கு ஜாதகம் ஒன்றை கணிக்கும்படி சந்திர பகவானுக்கு கூறியுள்ளார். சந்திர பகவானும் தான் கற்றுக்கொண்டதன் அடிப்படையில் அந்த குழந்தையின் ஜாதகத்தை கணித்துள்ளார். அதில், அந்த குழந்தை ஒரு வயது வரை மட்டுமே உயிருடன் இருக்கும் என்றும், ஒரு வயது பூர்த்தியடையும் போது பாம்பு கடித்து உயிரை விடும் என்றும் கணித்து எழுதியுள்ளார்.

    இதையடுத்து, சரியாக அந்த குழந்தையின் முதல் வயது பூர்த்தியடையும் போது என்ன நடக்கிறது? என்பதை பார்க்க குரு பகவானும், சந்திரனும் விண்ணுலகில் இருந்து பார்த்தனர். அப்போது, சந்திரன் கணித்தது போலவே அந்த குழந்தையின் ஒரு வயது பூர்த்தியடைய சில நிமிடங்களே இருந்த சூழலில், அந்த குழந்தை படுத்திருந்த தொட்டியின் மீது பாம்பு ஒன்று வந்தது.

    இதைக்கண்ட சந்திரனுக்கு தான் கணித்தது போலவே நடக்கிறது என்ற மகிழ்ச்சி ஏற்பட்டது. குரு பகவானும் இதை பார்த்துக் கொண்டிருந்தார். தொட்டிலில் இருந்த குழந்தை தன்னை நோக்கி வரும் பாம்பை ஒரு விளையாட்டு பொருளாக நினைத்து துள்ளிக்குதித்தது. இதனால், தொட்டில் ஆடியது.

    அப்போது பாம்பின் தலை தொட்டிலின் சங்கிலியில் சிக்கிக் கொண்டது. சங்கிலியில் சிக்கிக் கொண்ட பாம்பு அதில் இருந்து தப்பிக்க தனது உடலை முன்னும், பின்னும் அசைத்தது.

    இதைப்பார்த்த குழந்தை இன்னும் உற்சாகமாக தொட்டிலில் துள்ளிக்குதித்தது. இதனால், பாம்பின் வால் உள்பட பின்பகுதியும் தொட்டிலில் மறுமுனை சங்கிலியில் சிக்கிக்கொண்டது. குழந்தை துள்ளிக்குதிக்கவும், தொட்டில் சங்கிலி இறுகவும் பாம்பு உடல் நசுங்கி உயிரிழந்தது.

    இதைக்கண்ட சந்திரன் அதிர்ச்சியில் உறைந்தான். சந்திரனின் கணிப்புப்படி, பாம்பு கடித்து குழந்தையே உயிரிழக்க வேண்டும். ஆனால், சங்கிலியில் சிக்கி பாம்பு உயிரிழந்தது. இதனால், தன்னுடைய கணிப்பை சந்திரன் சரிபார்க்கத் தொடங்கினான். சந்திரனின் கணிப்பு மிகச்சரியாகவே இருந்தது.

    இதையடுத்து, குரு பகவானிடம் தனது கணிப்பில் எந்த தவறும் இல்லையே? பின் எப்படி குழந்தை உயிர் பிழைத்தது? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த குரு பகவான் உனது கணிப்பில் தவறு இல்லை. ஆனால், குரு பகவானாகிய எனது பார்வை இருந்ததால் குழந்தை உயிர் பிழைத்தது என்று விளக்கம் அளித்தார்.

    மேலும், சந்திரனிடம் உனது ஜாதக கணிப்பு தவறு இல்லை என்றும், அதனால் உனக்கு வந்த ஆணவமே தவறு என்று கூறியுள்ளார்.

    தலைக்கணம் நீங்கிய சந்திரன், குரு பார்வையின் மகிமையையும் புரிந்து கொண்டார். இதன் காரணமாகவே குரு பார்க்க கோடி நன்மை என்று உண்டாகியதாக புராணங்கள் கூறுகிறது.

    • குரு பெயர்ச்சிக்கு பரிகாரம் செய்ய வேண்டியவர்கள்.
    • குரு பெயர்ச்சி வரும் மே 1-ந் தேதி நடைபெற உள்ளது.

    குரு பெயர்ச்சி வரும் மே 1-ந் தேதி நடைபெற உள்ளது. குரு பெயர்ச்சியானது சில ராசியினரின் வாழ்வில் ஏற்றத்தையும், மாற்றத்தையும் தரும் என்பது பலரின் நம்பிக்கை ஆகும். குரு பெயர்ச்சிக்கு பரிகாரம் செய்ய வேண்டியவர்கள் எந்தெந்த கோயிலுக்கு செல்லலாம்? என்பதை கீழே விரிவாக காணலாம்.

     வலிதாயநாதர் கோவில்:

    சென்னை, பாடியில் உள்ள வலிதாயநாதர் கோவில் குருபெயர்ச்சி தினத்தில் சென்று வழிபட வேண்டிய கோவில் ஆகும். பரிகாரம் செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த கோயிலுக்கு சென்று வழிபடுவது நல்லது ஆகும். இந்த கோவில் குருபகவான் வழிபட்ட தலம் என்று புராணங்களில் கூறப்படுகிறது. இந்த தலமானது குருபகவானுக்கு மிகச்சிறந்த பரிகார தலம் என்று புராணங்கள் கூறுகிறது.

     தஞ்சாவூர் வசிஷ்டேஸ்வரர் கோவில்:

    தஞ்சாவூரில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவில். இந்த கோயிலில் தேவாரம் பாடல் பாடப்பெற்றுள்ளதாக புராணங்களில் கூறப்படுகிறது. மங்காம்பிகை சமேத வசிஷ்டேஸ்வரராக காட்சி சிவபெருமானும் பார்வதி தேவியும் காட்சி தரும் இந்த கோலத்தில், இவர்கள் இருவருக்கும் நடுவில் நின்ற கோலத்தில் குருபகவான் ராஜகுருவாக காட்சி தருகிறார். தோஷங்கள் நீங்க இந்த கோயிலில் உள்ள மங்காம்பிகை - சமேத வசிஷ்டேஸ்வரருடன் காட்சி தரும் குருபகவானை வணங்கினால் நன்மை பயக்கும் என்பது ஐதீகம் ஆகும்.

     திருவாரூர் ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவில்:

    திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவில் மிகச்சிறந்த குரு பரிகாரத் தலம் ஆகும். இங்கு தட்சிணாமூர்த்தியாக குரு பகவான் காட்சி தருகிறார். குருபகவான் தனது சீடர்களுக்கு 24 அட்சரங் மந்திரத்தை உபதேசித்த காரணத்தால், இங்கு தட்சிணாமூர்த்தியை 24 முறை வலம் வந்து, 24 தீபங்கள் ஏற்றி வழிபட்டால் தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம் ஆகும். குரு பகவானுக்கு உகந்த வியாழக்கிழமைகளில், குருபகவானுக்கு மஞ்சள் நிற பட்டுடுத்தி முல்லை மலர்களால் அர்ச்சனை செய்வதும் சிறப்பு என்று கூறப்படுகிறது.

     மயிலாடுதுறை மயூரநாதர் கோவில்:

    மயிலாடுதுறையில் உள்ள அமைந்துள்ளது மயூரநாதர் கோவில். இந்த கோவில் காசிக்கு நிகரான தலமாக கருதப்படுகிறது. இந்த கோயிலில் குரு பகவான் தட்சிணாமூர்த்தியாக காட்சி தருகிறார். காசிக்கு நிகரான இந்த கோயிலில் உள்ள தட்சிணாமூர்த்தியை வழிபட்டால் குரு தோஷங்கள் நீங்கும் என்பது பக்தர்களின் ஐதீகம் ஆகும்.

     காரைக்குடி பட்டமங்கலம் தட்சிணாமூர்த்தி கோவில்:

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே பட்டமங்கலம் அமைந்துள்ளது. இங்கு குரு வடிவத்தில் சிவ பெருமான் தோன்றி கார்த்திகை பெண்களின் சாபத்தை நீக்கியதாக ஸ்தல வரலாறு கூறுகிறது. இந்த கோயிலில் மட்டும் தட்சிணாமூர்த்தி கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். வியாழக்கிழமைகளில் இந்த கோயிலில் உள்ள தட்சிணாமூர்த்தியையும், அந்த கோயிலுக்கு பின்புறமுள்ள ஆலமரத்தையும் வழிபட்டு 12 முறை வலம் வந்தால் குரு தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம் ஆகும்.

     ஸ்ரீவைகுண்டம் ஆழ்வார் திருநகரி:

    நவ திருப்பதிகளில் ஒன்றாக ஸ்ரீவைகுண்டம் ஆழ்வார் திருநகரி கோவில் கருதப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த கோவில் உள்ளது. நம்மாழ்வார் அவதரித்த இந்த கோயிலில் குருவாக ஆதிநாத பெருமாள் காட்சி தருகிறார். அவரை வணங்கினால் குரு தோஷங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை ஆகும்.

     திருச்செந்தூர் முருகன் கோவில்:

    அறுபடை வீடுகளில் ஒன்றான புகழ்பெற்ற திருச்செந்தூர் முருகன் கோயிலில் குரு பகவான் மேதா தட்சிணாமூர்த்தியாக காட்சி தருகிறார். முருகப்பெருமானை வணங்கி இவரையும் வணங்குவதால் ஏராளமான நன்மைகள் நமக்கு கிட்டும் என்பது பக்தர்களின் பூரண நம்பிக்கை ஆகும்.

     வல்லநாடு கைலாச நாதர் கோவில்:

    தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ளது வல்லநாடு. இங்குள்ள முறப்பநாட்டில் இந்த கோவில் உள்ளது. நவ கைலாயங்களில் ஒன்றான இந்த கோயிலில், குருவின் அம்சமாக கைலாச நாதர் உள்ளார். இவரை வணங்குவதால் குரு தோஷங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை ஆகும்.

    மேலே கூறிய கோவில்களுக்கு செல்ல முடியாதவர்கள், அருகில் உள்ள கோவில்களுக்கு சென்று அங்குள்ள தட்சிணாமூர்த்தியை வணங்குவதும் சிறப்பாகும்.

    • குருபகவான் கடந்த ஏப்ரல் 22-ம்தேதி மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு பெயர்ச்சி ஆனார்.
    • எந்தெந்த ராசிக்காரர்களுக்கு குரு பார்வையால் கட்டாயம் திருமணம் நடக்கும் என்று பார்க்கலாம்.

    குருபகவான் கடந்த ஏப்ரல் 22-ம்தேதி மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு பெயர்ச்சி ஆனார். 2023 குருப்பெயர்ச்சிக்கு பிறகு எந்தெந்த ராசிக்காரர்களுக்கு குரு பார்வையால் கட்டாயம் திருமணம் நடந்தே தீரும் என்பதை பார்க்கலாம்.

    சரியான வரன் கிடைக்காமல் , வரன் கிடைத்தாலும் பல காரணங்களால் திருமணம் தடைபட்டு விரக்தியில் இருக்கும் இந்த 7 ராசிக்காரர்களுக்கு இந்த குருப்பெயர்ச்சிக்கு பிறகு கட்டாயம் சிறப்பாக திருமணம் நடைபெற போகிறது.

    மேஷ ராசி – ஜென்ம குரு

    மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு ஜென்மத்தில் ராகுவும் ஏழாவது இடத்தில் கேதுவும் இருந்து திருமணத்தடை கொடுத்து வந்த நிலையில் குருப்பெயர்ச்சிக்கு பிறகு குரு பகவான் ஏழாவது வீட்டை பார்ப்பதால் மேஷ ராசிக்காரர்களுக்கு குருப்பெயர்ச்சிக்கு பிறகு திருமண தடை நீங்கும். ராகு கேதுவால் ஏற்பட்ட திருமண தடையை குரு பகவான் விலக்கி கொடுத்து வெற்றிகரமான திருமண வாழ்க்கையை அமைத்து தருவார்.

    மிதுன ராசி – லாப குரு

    அஷ்டமா சனி காலம் முடிந்து வெற்றியின் தொடக்கத்தில் இருக்கும் மிதுன ராசிக்காரர்களுக்கு, குருப்பெயர்ச்சியால் திருமண வாழ்க்கையும் சிறப்பாக அமையப் போகிறது. குரு பகவான் 11ஆம் வீட்டுக்கு மாறப் போகிறார். இதனால் வரையில் வாழ்க்கையிலிருந்த பிரச்சனைகள் அனைத்தும் முடிவுக்கு வந்து கோடீஸ்வர யோகத்தோடு திருமண வாழ்க்கை அமையும்.

    சிம்ம ராசி – பாக்ய குரு

    சிம்ம ராசிக்காரர்களுக்கு அற்புதமான பலன் கிடைக்கும் குருப்பெயர்ச்சி இதுவாக இருக்கப்போகிறது. பாக்கியஸ்தானத்தில் பயணம் செய்யப் போகும் குரு பகவான் , அற்புதமான பண வரவோடு இனிமையான வாழ்க்கை துணையை உங்களுக்கு கண் முன்னே நிறுத்துவார். சனி பகவான் பார்வை சிம்ம ராசிக்கு ஏழாம் இடத்தில் விழுவதால் ஒரு சில மனக்கசப்புகள் ஏற்படும் எனினும் குரு பகவான் ஆசியோடு திருமணம் நடைபெறும்.

    துலாம் ராசி – களத்திர குரு

    குரு பகவான் ஏழாம் வீட்டிற்கு மாறி உங்கள் ராசியை பார்வையிடுகிறார். இதனால் வரை ஜென்மத்தில் கேதுவும் ஏழாம் இடத்தில் ராகுவும் இருந்து திருமண தடை ஏற்பட்டு வந்த நிலையில், ஏப்ரல் மாதம் குருப்பெயர்ச்சிக்குப் பிறகு குரு பார்வை கிடைப்பதால் கட்டாயம் திருமணம் நடந்தே தீரும்.

    தனுசு ராசி – பூர்வ புண்ய குரு

    ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி முடிந்து விட்டது , ஐந்தாம் வீடான பூர்வ புண்ணிய ஸ்தானத்துக்கு மாறப்போகிறார் குரு பகவான். குருவின் பார்வை ஒன்பதாம் இடத்திற்கு கிடைக்கப் போவதால், காதல் திருமணம் கைகூடவும், நீங்கள் விரும்பிய பெண்ணை மனம் முடிக்கவும் வாய்ப்புகள் வந்து சேரும். தனுசு ராசிக்காரர்களுக்கு அமோகமான திருமண வாய்ப்பு ஏற்படும்.

    கும்ப ராசி – தைரிய குரு

    கும்ப ராசிக்காரர்களுக்கு ஜென்ம சனி காலம், எனினும் ஏழாம் வீட்டில் குரு பார்வை விழுவதால், பல பிரச்சனைகள் வந்தாலும் திருமணம் தடை பெறாது. திருமணம் குழந்தை பாக்கியம் கிடைக்கும் அமைப்பு கும்ப ராசிக்காரர்களுக்கு உள்ளது.

    மீன ராசி - குடும்ப குரு

    2023 குருப்பெயர்ச்சியின் போது குரு பகவான் இரண்டாம் இடத்திற்கு செல்கின்றார். ராசிநாதனாகிய குரு பகவான் ஆசி இருப்பதால் மீன ராசிக்காரர்கள் ஏழரை சனியை நினைத்து கவலைப்பட வேண்டியது இல்லை. குரு பகவான் குடும்ப ஸ்தானத்துக்கு செல்வதால், இது வரையில் இருந்த திருமண தடை நீங்கும். கட்டாயம் மீன ராசிக்காரர்களுக்கு 2023 குருப்பெயர்ச்சி முடிந்தவுடன் திருமணம் நடந்தே தீரும்.

    ஆன்மிகம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/devotional

    குருப்பெயர்ச்சி பலன்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்...https://www.maalaimalar.com/rasipalan

    • ஒரே நாளில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
    • இங்கு இறைவன் மார்க்கண்டேயருக்காக எமனை உதைத்து அருளினார் என்பது தலவரலாறு.

    மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது. சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகிய மூவராலும் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் இக்கோவிலும் ஒன்று. இங்கு அமிர்தமே லிங்கமாக அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. அட்டவீரட்ட தலங்களில் ஒன்றான இக்கோவிலில் காலசம்ஹார மூர்த்தி உற்சவராக அருள்பாலித்து வருவது சிறப்பம்சமாகும்.

    இங்கு இறைவன் மார்க்கண்டேயருக்காக எமனை உதைத்து அருளினார் என்பது தலவரலாறு. ஆயுள் விருத்திக்காக ஏராளமான பக்தர்கள் இக்கோவிலுக்கு வந்து வழிபாடு செய்து வருகிறார்கள். மணிவிழா, சதாபிஷேகம் மற்றும் ஆயுள்ஹோமம் உள்ளிட்டவற்றை இங்கு நடத்துவது ஐஸ்வர்யங்களை தரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    இந்த நிலையில் குருப்பெயர்ச்சியையொட்டி நேற்று திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் ஆயுள் விருத்தி ஹோமங்களை நடத்த ஏராளமான பக்தர்கள் திரண்டனர். அப்போது 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் தங்கள் ஆயுள் விருத்திக்காக மணிவிழா, சதாபிஷேகம், ஆயுள் ஹோமம், சஷ்டியப்தபூர்த்தி உள்ளிட்ட யாக பூஜைகள் மற்றும் திருமணங்களை செய்துகொண்டனர்.

    நேற்று ஒரே நாளில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இதனால் கோவில் வளாகம், சன்னதி வீதி, மேலவீதி, கீழவீதி, வடக்கு மடவளாகம், தெற்கு மடவளாகம், கடைவீதி, உள்ளிட்ட பகுதிகளில் பக்தர்களின் கூட்டம் அலை மோதியது. போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. இதை கட்டுப்படுத்த பொறையாறு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • நவக்கிரகங்களில் உள்ள தட்சிணாமூர்த்தி சிறப்பு பூஜை நடந்தது.
    • குரு பகவானுக்கு 16 வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது

    மதுரை மீனாட்சி அம்மன் கோவில், இன்மையில் நன்மை தருவார் கோவில், கூடலழகர் பெருமாள் கோவில், மதனகோபாலகிருஷ்ணன் கோவில் உள்ளிட்ட பல கோவில்களில் நவக்கிரகங்களில் உள்ள தட்சிணாமூர்த்தி குரு பெயர்ச்சியையொட்டி சிறப்பு பூஜை நடந்தது.

    குருபெயர்ச்சியை முன்னிட்டு மதுரை நேதாஜி ரோடு பாலதண்டாயுதபாணி கோவிலில் சிறப்பு யாகம், அபிஷேகம் அலங்காரம் நடைபெற்றது. இதையடுத்து சிறப்பு அலங்காரத்தில் தட்சிணாமூர்த்தி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பரிகார பூஜை செய்து வழிபட்டனர்.

    மேலூர் அருகே தும்பைப்பட்டி சிவாலயபுரத்தில் உள்ள கோமதி அம்பிகை சமேத சங்கர லிங்கம் சுவாமி, சங்கர நாராயணர் சுவாமி கோவிலில் குரு பகவான் மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு பெயர்ச்சியையொட்டி சிறப்பு பூஜை, அர்ச்சனை, அலங்கார வழிபாடு நடைபெற்றது.

    குரு பகவானுக்கு எண்ணெய் காப்பு சாற்றி, திரவியம், மஞ்சள், பஞ்சகவ்யம், பச்சரிசி மாவு, திருமஞ்சனம், பால், தயிர், இளநீர், கரும்பு சாறு, பழச்சாறு, பஞ்சாமிர்தம், தேன் உள்ளிட்ட 16 வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. குரு பகவான் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.

    அலங்காநல்லூர் அய்யப்பன் கோவிலின் உள் பிரகாரத்தில் குருபகவான் சன்னதி உள்ளது. இங்கு மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்கு குரு பகவான் பெயர்ச்சியானதையொட்டி சிறப்பு யாக பூஜைகள் நடந்தது. பட்டர்களின் வேத மந்திரங்கள் முழங்க குருபகவானுக்கு பல்வேறு அபிஷேகங்கள், அலங்காரம், தீபாராதனைகள் நடந்தது. பரிகார ராசிக்காரர்கள், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு குருபகவானை தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி சீனிவாசன் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.

    • குரு பகவான் சன்னதியில் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன.
    • தட்சணாமூர்த்திக்கு 108 லிட்டர் பால்குட அபிஷேகம் நடைபெற்றது.

    மீனராசியில் இருந்து மேஷ ராசிக்கு நேற்று இரவு 11.24 மணிக்கு குருப்பெயர்ச்சி நடந்தது. இதையொட்டி திருவள்ளூர் அடுத்த காக்களூரில் உள்ள ஸ்ரீயோகா ஞான தட்சண மூர்த்தி கோவிலில் சிற்ப்பு வழிபாடு நடைபெற்றது.

    கோவிலில் உள்ள குரு பகவான் சன்னதியில் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

    முன்னதாக இரவு 8 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, காளி ஹோமம், லட்சுமி ஹோமம், நவகிரக ஹோமம், தட்சணாமூர்த்தி மூலமந்திரம் ஹோமம் ஸ்ரீயோகஞான தட்சணாமூர்த்தி அஸ்த்ர ஹோமம் நடந்தது.

    தொடர்ந்து 9 மணிக்கு தட்சணாமூர்த்திக்கு 108 லிட்டர் பால்குட அபிஷேகம் நடைபெற்றது. சரியாக இரவு 11.24 மணிக்கு குருப்பெயர்ச்சி அடையும் நேரத்தில் குருபகவான் சிலைக்கு மகா தீபாராதனை நடந்தது.

    பரிகாரம் செய்ய வேண்டிய ராசிக்காரர்கள் கோவிலில் நடைபெற்ற பரிகார மகா யாகத்தில் பங்கேற்றனர். குருபெயர்ச்சி சிறப்பு வழிபாட்டில் திருவள்ளூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    • தெட்சணாமூர்த்திக்கு நட்சத்திர தீபாராதனை நடைபெற்றது.
    • ஏராளமான பக்தர்கள் விளக்கேற்றி வழிபாடு செய்தனர்.

    ஆண்டுதோறும் குருபகவான் ஒரு குறிப்பிட்ட ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயர்வது உண்டு. அந்த தினம் குருபெயர்ச்சி என அழைக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி திருப்பத்தூர் அருகே உள்ள பட்டமங்கலத்தில் மீனாட்சி சுந்தரேசுவரர், தெட்சணாமூர்த்தி கோவில் உள்ளது. இக்கோவிலில் குருபகவான் கிழக்கு நோக்கி எழுந்தருளி அருள்பாலிப்பது மற்றொரு சிறப்பாகும். இத்தகைய சிறப்பு பெற்ற இக்கோவிலில் ஆண்டுதோறும் குருபெயர்ச்சி விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

    இந்தாண்டிற்கான இந்த விழா கடந்த 16-ந்தேதி சிறப்பு யாகத்துடன் தொடங்கியது. இந்தாண்டு நேற்று இரவு 11.29 மணிக்கு குரு பகவான் மீனராசியில் இருந்து மேஷ ராசிக்கு பெயர்ந்தார். முன்னதாக நேற்று அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று வெள்ளி அங்கி அணிந்து சந்தனகாப்பு அலங்காரத்தில் தெட்சணாமூர்த்தி அருள்பாலித்தார்.

    மூலவர் எதிரே தல விருட்சமான ஆலமரத்தடியில் முனிவர்கள் தனந்தகுமாரர், தனநந்தர், தனாதனர், சனகர் ஆகியோருக்கு கார்த்திகை பெண்கள் முன்னிலையில் மந்திரம் உபதேசிக்கும் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். தொடர்ந்து கால சந்தி, உச்சி காலம், சாயரட்சை பூஜை ஆகியவை நடைபெற்றது.

    இரவு 11.29 மணிக்கு குரு பெயர்ச்சியானதும் ராஜகோபுரம், மூலவர் கோபுரம் ஆகிய கோபுரங்களுக்கு ஏழு முக தீபாராதனை நிகழ்ச்சியும், மூலவர் தெட்சணாமூர்த்திக்கு நட்சத்திர தீபாராதனையும் நடைபெற்றது. விழாவையொட்டி சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருச்சி, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து விளக்கேற்றி வழிபாடு செய்தனர்.

    மேலும் பக்தர்களுக்கு வேண்டிய குடிதண்ணீர், உணவு உள்ளிட்ட வசதிகளை கோவில் பரம்பரை அறங்காவலர் வீரப்ப செட்டியார் தலைமையில் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர். விழாவையொட்டி ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    • குருபகவானுக்கு திருமஞ்சனம், சிறப்பு அபிஷேகம் ஆராதனை செய்தனர்.
    • பரிகார ராசிகளுக்கு அர்ச்சனை நடந்தது.

    சோழவந்தான் அருகே வைகைஆறு கரை அருகே குருவித்துறை கிராமம் உள்ளது. இங்கு பிரசித்தி பெற்ற சித்திரரத வல்லபபெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் குரு பகவானுக்கு தனி சன்னதி உள்ளது. இந்த சன்னதியில் குருபகவான், பெருமாளை நோக்கி தவக்கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இதே சன்னதியில் சக்கரத்தாழ்வாரும் உள்ளார். ஒவ்வொரு குருபெயர்ச்சி தோறும் குருபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி ஆவது வழக்கம்.

    அதன்படி இதுவரை மீனம் ராசியில் இருந்து வந்த குருபகவான் நேற்று இரவு 11.21 மணி அளவில் மேஷ ராசிக்கு பெயர்ச்சி ஆனார். இதை தொடர்ந்து குருவித்துறை குருபகவான் கோவிலில் குருபெயர்ச்சி விழா 3 நாட்கள் நடந்தது. இந்த விழாவை முன்னிட்டு கடந்த வியாழக்கிழமை காலை 10.30மணி அளவில் லட்சார்ச்சனை ஆரம்பமானது. நேற்று மதியம் வரை லட்சார்ச்சனை நடைபெற்றது.

    நேற்று இரவு 9 மணி அளவில் பரிகார மகாயாக பூஜை நடந்தது. இதில் ஸ்ரீதர்பட்டர், ரெங்கநாதபட்டர், சடகோபப்பட்ட, பாலாஜிபட்டர், ராஜாபட்டர் உள்பட 15 அர்ச்சகர்கள் வேதமந்திரங்கள் ஓதி யாகபூஜை நடத்தினர். மகாபூர்ணாஹீதி, அர்ச்சகர்கள் புனித நீர்க்குடங்களை எடுத்து மேளதாளத்துடன் கோவிலை சுற்றி வலம் வந்தனர். குருபகவானுக்கு திருமஞ்சனம், சிறப்பு அபிஷேகம் ஆராதனை செய்தனர். குருபகவான், சக்கரத்தாழ்வாருக்கு சிறப்பு அலங்காரம் செய்து பரிகார ராசிகளுக்கு அர்ச்சனை நடந்தது.

    இதில் வெங்கடேசன் எம்.எல்.ஏ. மற்றும் முக்கிய பிரமுகர்கள், பக்தர்கள் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் குருபகவானை தரிசித்தனர். அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் ராஜ்குமார் தலைமையில் மருத்துவ குழு மற்றும் வாடிப்பட்டி தாசில்தார் வீரபத்திரன் தலைமையில் வருவாய்த்துறையினர் மற்றும் அறநிலைய துறையினர் போலீசாருடன் தடுப்பு வேலி ஏற்படுத்தி பக்தர்கள் கூட்டத்தை ஒழுங்குபடுத்தி சமூக இடைவெளியுடன் சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்திருந்தனர்.

    சமயநல்லூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலசுந்தர், சோழவந்தான் இன்ஸ்பெக்டர் சிவபாலன் உள்பட 400-க்கும் மேற்பட்ட போலீசாரும், சோழவந்தான் தீயணைப்பு நிலைய அலுவலர் பசும்பொன், போக்குவரத்து அலுவலர் பழனிமுத்து தலைமையில் தீயணைப்பு படையினர் மற்றும் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். விழாவையொட்டி சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் இளங்கோவன், செயல் அலுவலர் பாலமுருகன், கோவில் பணியாளர்கள் நாகராஜ், மணி பிரகாஷ், ஆகியோர் செய்திருந்தனர்.

    ×