search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Container"

    • சென்னை நோக்கி சென்ற கண்டெய்னர் லாரியுடன் நேருக்கு நேர் மோதியது.
    • கண்டெய்னர் லாரியின் டிரைவரான நெல்லையை சேர்ந்த பேச்சிமுத்து பாண்டியன் என்பவர் படுகாயம் அடைந்தார்.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியில் இருந்து சேலம் நோக்கி இன்று காலை 7 மணி அளவில் ஒரு மினி ஆட்டோ வந்து கொண்டிருந்தது. மினி ஆட்டோவை விழுப்புரத்தை சேர்ந்த பிரவீன்குமார் என்பவர் ஓட்டி வந்தார். அவருடன் அரக்கோணம் பகுதியை சேர்ந்த சுதர்சன் மற்றும் குடியாத்தம் பகுதியை சேர்ந்த பிரகாசம் ஆகியோரும் வந்தனர்.

    சேலம்-சென்னை புறவழிச் சாலையில் வாழப்பாடி கிழக்குக்காடு அருகே மினி ஆட்டோ வந்தபோது சேலத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற கண்டெய்னர் லாரியுடன் நேருக்கு நேர் மோதியது.

    இந்த விபத்தில் மினி ஆட்டோ அப்பளம் போல் நொறுங்கியது. இதில் டிரைவர் பிரவீன்குமார், சுதர்சன் மற்றும் பிரகாசம் ஆகிய 3 பேரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர்.

    இது குறித்து தகவலறிந்த வாழப்பாடி போலீசார், தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    பின்னர் அங்கிருந்த சுங்கச்சாவடி பணியாளர்களுடன் சேர்ந்து கிரேன் எந்திரத்தை பயன்படுத்தி 3 பேர் உடலையும் மீட்டனர். தொடர்ந்து பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த விபத்தில் கண்டெய்னர் லாரியின் டிரைவரான நெல்லையை சேர்ந்த பேச்சிமுத்து பாண்டியன் என்பவர் படுகாயம் அடைந்தார். அவரையும் மீட்ட போலீசார் சிகிச்சைக்காக வாழப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த கோர விபத்து குறித்து தகவல் அறிந்த வாழப்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு ஹரி சங்கரி, இன்ஸ்பெக்டர் உமாசங்கர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து விசாரணை நடத்தினர்.

    இந்த விபத்தால் சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்களை அப்புறப்படுத்திய போலீசார் போக்குவரத்தை சீர் செய்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மினி ஆட்டோ மீது லாரி மோதியதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது இப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

    • சொந்தமான சரக்கு வேன்கள் மூலம் தூத்துக்குடி துறைமுகத்திற்கு அனுப்பப்பட்டது.
    • விசாரணை மேற்கொண்ட போது முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தார்.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள அருள்புரத்தில் தனியார் பனியன் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு தயாரிக்கும் பனியன்கள் அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மன் போன்ற நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 10 ஆயிரம் பனியன்கள் தயார் செய்யப்பட்டு அட்டைப் பெட்டிகளில் பன்டல் செய்யப்பட்டு, அமெரிக்கா அனுப்பப்படுவதற்காக, அருள்புரத்திலிருந்து தனியாருக்கு சொந்தமான சரக்கு வேன்கள் மூலம் தூத்துக்குடி துறைமுகத்திற்கு அனுப்பப்பட்டது. அங்கிருந்து கப்பல் மூலம் அமெரிக்கா அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், அனுப்பப்பட்ட பண்டல்களில் 1,300 பனியன்கள் குறைவாக இருப்பதாக அமெரிக்க நிறுவனம் தனியார் பனியன் நிறுவனத்திற்கு தகவல் அனுப்பியது. இதுகுறித்து பனியன் நிறுவனத்தினர் ஆய்வு செய்தபோது சரக்கு வேனில் இருந்து பனியன்கள் திருடப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் பனியன் நிறுவன மேலாளர் சதீஷ் என்பவர் பல்லடம் போலீசில் புகார் அளித்தார்.

    புகாரின் பேரில் பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் நேற்று காரணம் பேட்டை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, அந்த வழியே பனியன் நிறுவனத்தில் சரக்குகளை ஏற்றிச் சென்ற வேன் ஏஜென்ட் சிவா என்பவர் அந்த வழியே வந்தார். அவரிடம் விசாரணை மேற்கொண்ட போது முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தார். இதனையடுத்து அவரை போலீசார் பல்லடம் போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டதில் அவர் பனியன்களை திருடியதை ஒப்புக்கொண்டார். இது குறித்த விசாரணையில் அவர் கூறியதாவது:-

    வால்பாறையைச் சேர்ந்த கருப்பையா என்பவரது மகன் சிவா(32) திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையைச் சேர்ந்த காத்தான் மகன் சிவக்கண்ணன்(36) அதே பகுதியைச் சேர்ந்த பூமி பாலன் மகன் ஜெயபால்(34) ஆகிய மூவரும் சேர்ந்து அவர்களுக்கு சொந்தமான சரக்கு வேன்களில் பனியன் அட்டைப் பெட்டிகளை கொண்டு சென்றனர்.

    அப்போது அருள்புரத்திலிருந்து தூத்துக்குடி துறைமுகம் செல்லும் வழியில் அட்டைப்பெட்டிகளில் இருந்து 1,300 பனியன்களை திருடியதும், அவற்றை வெளி வியாபாரிடம் விற்றதையும் ஒப்புக்கொண்டனர். இதையடுத்து அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து ரூ.1.5 லட்சம் பணத்தை பறிமுதல் செய்து, பல்லடம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • 5-வது அணு உலைக்காக தயாரிக்கப்பட்ட உள் உறுப்புகளுடன் கூடிய அணு உலை கலன் ரஷ்யாவில் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டுள்ளது.
    • ரஷ்ய உதவியுடன் இதே திறன் கொண்ட மேலும் நான்கு உலைகளை உருவாக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் முதல் மற்றும் 2-வது அணு உலைகள் மூலமாக தலா ஆயிரம் மெகாவாட் மின்உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. தொடர்ந்து 3 மற்றும் 4-வது அணு உலைகள் கட்டுமான பணிகள் நடைபெற்று வரும் நிலையில் 5 மற்றும் 6-வது அணு உலைக்கான பணிகளும் நடந்து வருகிறது.

    இந்நிலையில் இந்த திட்டத்தின் 5-வது அணு உலைக்காக தயாரிக்கப்பட்ட உள் உறுப்புகளுடன் கூடிய அணு உலை கலன் ரஷ்யாவில் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டுள்ளது.கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு இந்திய மற்றும் ரஷ்ய நிபுணர்கள் முன்னிலையில், ரஷ்யாவின் வோல்கோடோன்ஸ்கில் உள்ள ரோசாடோம் - அடோமெனெர்கோமாஷ் என்ற எந்திர கட்டுமான பிரிவின் ஒரு பகுதியான ஆட்டம்மாசில் கூடங்குளம் அணு உலைக்காக தயாரிக்கப்பட்ட அணுஉலை கலன் சோதனை செய்யப்பட்டது.

    இந்த சோதனையின்போது முதலில் வல்லுநர்கள் 600 டன் தூக்கும் திறன் கொண்ட கிரேனை பயன்படுத்தி, 11 மீட்டர் உயரம் உள்ள வி.வி.இ.ஆர்-1,000 என்ற உலையை அதன் வடிவமைப்பு நிலையில் நிறுவினர். பின்னர், 73 டன் எடையுள்ள 10 மீட்டர் நீளமுள்ள கோர் பீப்பாய், 38 டன் எடையுள்ள கோர் பேபில் மற்றும் 68 டன் எடை உள்ள பாதுகாப்பு குழாய் அலகு ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக கீழே இறக்கினர்.

    பின்னர் உலையானது நிலையான உலை மூடியுடன் மூடப்பட்டது. இதன்காரணமாக அந்த அணு உலையானது மொத்த எடை 603 டன்களை எட்டியது. ஏற்கனவே நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட் நிறுவனமானது கடந்த 2013 மற்றும் 2016-ல் முறையே 2 வி.வி.இ.ஆர். உலைகளை தயாரித்து கூடங்குளத்தில் இயக்கி உள்ள நிலையில், தற்போது ரஷ்ய உதவியுடன் இதே திறன் கொண்ட மேலும் நான்கு உலைகளை உருவாக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

    • திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகத்தில் சரக்கு போக்குவரத்து முக்கிய பங்கு வகிக்கிறது.
    • கன்டெய்னர் கட்டண உயர்வு மற்றும் தட்டுப்பாடு காரணமாக பனியன் ஏற்றுமதியாளர்கள் கடும் சிரமத்தை சந்தித்தனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகத்தில் சரக்கு போக்குவரத்து முக்கிய பங்கு வகிக்கிறது. ஆயத்த ஆடைகளை தயாரித்து கன்டெய்னர்களில் அடைத்து கப்பல் மற்றும் விமானம் மூலமாக அனுப்பி வைக்கப்படுகிறது. கொரோனா ஊரடங்கு காலத்தில் ஆடைகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு கன்டெய்னர் கட்டணம் அபரிமிதமாக உயர்ந்தது. துறைமுக ஊழியர்கள் விடுப்பு மற்றும் பற்றாக்குறை காரணமாகவும், கிருமிநாசினி தெளிப்பு உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்ததாலும் கன்டெய்னர் பற்றாக்குறை ஏற்பட்டது.

    இதன்காரணமாக கன்டெய்னர் கட்டணமும் பலமடங்கு உயர்ந்தது. இதனால் திருப்பூரில் இருந்து ஆடைகளை தயாரித்து வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதிலும், வெளிநாட்டினர் இறக்குமதி செய்வதிலும் கடும் சிரமம் ஏற்பட்டது. பலமடங்கு கன்டெய்னர் கட்டண உயர்வு மற்றும் தட்டுப்பாடு காரணமாக பனியன் ஏற்றுமதியாளர்கள் கடும் சிரமத்தை சந்தித்தனர்.

    இந்தநிலையில் தற்போது கன்டெய்னருக்கான கட்டணம் குறைந்து வருவது ஏற்றுமதியாளர்களை நிம்மதி அடைய செய்துள்ளது. அதன்படி கடந்த ஜனவரி மாதம் தென்னிந்திய துறைமுகத்தில் இருந்து அமெரிக்காவின் மேற்கு பகுதிக்கு அனுப்பி வைக்க 17 ஆயிரம் டாலர் கட்டணம் இருந்தது. தற்போது 4 ஆயிரம் டாலராக குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இதுபோல் ஐரோப்பிய நாடுகளுக்கான கன்டெய்னர் கட்டணம் 9 ஆயிரம் டாலரில் இருந்து 4,500 டாலராக குறைந்துள்ளதாக ஏற்றுமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    தற்போது பஞ்சு விலை குறைவு, நூல் விலை குறைவு காரணமாக ஏற்றுமதியாளர்களுக்கு புதிய நம்பிக்கை கிடைத்துள்ள நிலையில் சரக்குகளை அனுப்பி வைக்கும் கன்டெய்னர் கட்டணமும் குறைந்து வருவது ஏற்றுமதியாளர்களுக்கு சாதகமாக அமைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

    ×