

இந்து சமயத்தில் உள்ள அனைத்து "கடவுள்களுக்கும், அவர்களுக்கேற்ற ஆலயங்களும், வழிபாட்டு முறைகளும் உள்ளன. ஆனால், எல்லா இடங்களிலும் மிகவும் எளிமையாக இருந்து அருள்பாலிப்பவர், விநாயகப் பெருமான் கோவில்கள் மட்டுமின்றி, ஆற்றங்கரை, குளத்தங்கரை, அரச மரத்தடி, சாலையோரம் என எந்த இடத்திலும் விநாயகர் வீற்றிருப்பார்.
வினைகள் தீர்க்கும் விநாயகப் பெருமானின் கோவில்களில் மலை உச்சியில் அமைந்த கோவில் என்னும் பெருமை பெற்றது உச்சிப்பிள்ளையார் கோவில்.
திருச்சி என்றதும் நம் நினைவுக்கு வருவது மலைக்கோட்டை தான். இந்தக் கோட்டை 6-ம் நூற்றாண்டில் பல்லவர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டதாக கருதப்படுகிறது. சுமார் 273 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த மலை உச்சியில் உச்சிப் பிள்ளையார் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலை அடைய கிட்டத்தட்ட 400 படிகளுக்கு மேல் ஏறிச் செல்ல வேண்டும்.
ராமாயணத்தோடு தொடர்புடையதாக இக்கோவில் கருதப்படுகிறது. விபீஷணரிடம் சிறுவனாக தோன்றி, பின் இங்கு பிள்ளையாராக அருட்காட்சி அளித்தார். மேலும், மலை அடிவாரத்தில் மாணிக்க விநாயகர் கோவிலும், மலையின் இடைப்பகுதியில் தாயுமானவர் கோவிலும் அமைந்துள்ளன.
தமிழ்நாட்டில் மிகவும் புகழ்பெற்ற, மிகப் பெரிய குடைவரைக் கோவில், பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவில். சுமார் 1300 ஆண்டுகளுக்கு மேல் பழமையான இக்கோவிலில் அருள்பாலிக்கும் கற்பக விநாயகர், 6 அடி உயரத்தில் காட்சி அளிக்கிறார். இவர் கையில் சிவலிங்கத்தை ஏந்திய நிலையில் வலம்புரி விநாயகராக அருள்பாலிக்கிறார்.
ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி விழா 10 நாட்கள் வெகுவிமரிசையாக நடைபெறும். திருவிழாவின் இறுதி நாளில் விநாயகருக்கு படைக்கப்படும் பிரமாண்ட கொழுக்கட்டை நைவேத்தியம் மிகவும் புகழ் பெற்றது.